தண்ணீரைக் குறைத்தது கர்நாடகம்.. மேட்டூர் நீர்மட்டம் குறைகிறது
சமீப நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பாக கர்நாடகம் மற்றும் கேரளப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. படு வேகமாக அதிகரித்த நீர்வரத்தால், அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து 120 அடியைத் தாண்டியது.
இதையடுத்து அணையிலிருந்து கூடுதலாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆறு பொங்கிப் பெருக்கெடுத்து பார்க்கவே பரவசமாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்நாடகத்திலிருந்து விடுவிக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாக குறைந்துள்ளது.
இதையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது அணையிலிருந்து விநாடிக்கு 27,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 120.47 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.