‘மீசை’யை வெட்ட மறுத்த ‘அப்ரிடியை’க் கடத்தி, ஒரு மாதம் குகையில் அடைத்த தீவிரவாதிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கடத்திச் சென்று குகையில் ஒருமாதம் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்திய பின்னரும் தன் மீசையை மழிக்க மாட்டேன் என உறுதியோடு வாழ்கிறாராம் பாகிஸ்தானியர் ஒருவர்.
ஒரு மனிதரைப் பணத்திற்காக அல்லது பழி தீர்க்கக் கடத்துவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், மீசையை வெட்டச் சொல்லி கடத்தினார்கள் என கேட்கும் போதே ஆச்சர்யமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் இருக்கிறதல்லவா. இதை விடக் கொடுமை அவரைக் கடத்தியவர்கள் பயங்கர தீவிரவாதிகள் என்பது தான்.
மீசைக்கார நண்பா....
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் வசித்து வரும் முகமது கான் அப்ரிடி, 48 வயது மனிதருக்கு மீசை தான் உயிரே.
மீசை கருப்பு...
நம்மூரில் பெண்கள் தங்கள் கூந்தலைப் பராமரிப்பார்களே, அதுபோல தினமும் சுமார் அரை மணி நேரம் செலவழித்து தன் மீசை அழகைப் பாதுகாத்து வருகிறாராம் அப்ரிடி.
அம்மாடியோவ்....
அப்ரிடியின் மீசை 30இன்ச் நீளம். அதாவது 76செமீ. குழந்தையைப் போல கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார் தனது மீசையை. பிரத்யேக எண்ணெய், ஷாம்பூ என மீசைப் பராமரிப்பிற்கு மட்டும் மாதம் ரூ 9000 செலவாகிறதாம் இவருக்கு.
என்னல சொல்ற...
மீசையினால் பிரபலமான இவருக்கு, கடந்த 2009ம் ஆண்டு தீவிரவாத கும்பல் ஒன்று மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ‘மீசையை வெட்டுறியா... இல்ல உன்ன வெட்டட்டுமா?' என்ற ரேஞ்சுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
கடத்தல்...
ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்தால், இவ்வளவு பெரிய மீசை வைத்திருந்தே பயனில்லை என அப்ரிடி நினைக்க, தீவிரவாத கும்பல் அவரைக் கடத்திச் சென்றது.
வெட்டிடுறேங்க....
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் குகையில் அடைத்து வைத்து அப்ரிடியை கொடுமைப்படுத்திய தீவிரவாதிகள் பின்னர் அவரை விடுவித்து விட்டனர். விடுவிப்பதற்கு முன் மீசையை வெட்டி விடுவதாக வாக்களித்தாராம் அப்ரிடி.
‘மீசை’மான்... சாரி, மேன்
ஆனால், தொடர்ந்து மீசையை வளர்த்து வரும் அப்ரிடி, தன் மீசை பற்றி இப்படிக் கூறுகிறார், ‘எனது மீசையை நான் என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். இந்த மீசையால் என்னை நிறைய பேர் மதிக்கிறார்கள். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் உணவு சாப்பிடாமல் கூட இருக்க முடியும் ஆனால் எனது மீசை இல்லாமல் இருக்கமுடியாது' எனத் தெரிவித்துள்ளார்.