நீட் தேர்வு அவசியம்.. யாரும் எதிர்க்கக் கூடாது.. பிரேமலதா திடீர் பேச்சு!
சென்னை: நீட் தேர்வு அவசியம் என்பதால் யாரும் எதிர்க்க வேண்டாம் என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் இதுவரை நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்தது. இதனையடுத்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் விதமாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மசோதாவிற்கு இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், நீட் தேர்வு அவசியம் எனவும், அதனை யாரும் எதிர்க்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இலங்கை படுகொலை உள்ளிட்ட பிரச்சினைக்கு திமுக தான் காரணம் எனவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி அவர், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் உள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த் நீட் தேர்வு அவசியம் எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.