ஜிஎஸ்டி : தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களுக்கு ரூ. 9,500 கோடி வருவாய் இழப்பு
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதால் நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் உயர்ந்தாலும் மாநிலங்களின் வருவாய் இழப்பு சுமார் 9,500 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள் இந்த நிதி ஆண்டில் கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கும் என்றும் இதனால் மத்திய அரசிடம் இருந்து சுமார் 9,500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பீடு பெறும் நிலைக்கு தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், எது நடக்கும் என்று முன்னரே கணித்து தான் உயிர் உள்ளவரை மறுத்து எதிர்த்து போராடினாரோ, அதுதான் தற்போது நடப்பது போலத் தெரிகிறது.
ஆம், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இதனால் மாநிலங்களின் வளர்ச்சிப்பணிகளுக்கு தேவைப்படும் நிதிக்கு பெரும்பாலும் மத்திய அரசின் கதவை தட்டவேண்டிய நிலை வரும்.
மேலும் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது என்பதாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜிஎஸ்டி வரி அமல்
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்புதான் தமிழக அரசு தரை தட்டிய கப்பல் போல தவித்து வந்தது. மேலும் கடுமையான நிதிச் சுமையில் இருந்ததால், வேறு வழி இல்லாமல் அவசர அவசரமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் அதிகரிக்கும் என்றும் அனைத்து பொருளாதார வல்லுநர்களும் அடித்துக் கூறினார்கள். இதனால் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அரைகுறை மனதுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
ஒட்டு மொத்த வருவாய் வளர்ச்சி விகிதம்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடியும் தருவாயில், ஒரு தனியார் நிறுவனம் எடுத்த புள்ளி விவரப்படி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் 2018ம் ஆண்டில் நாட்டின் ஒட்டு மொத்த வருவாய் வளர்ச்சி விகிதம் 2016ம் ஆண்டை விட 16.6 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வருவாய் இழப்பு
அதே நேரத்தில், மாநிலங்கள் வாரியாக பார்க்கும் போது, தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள் இந்த நிதி ஆண்டில் கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கும் என்றும் இதனால் மத்திய அரசிடம் இருந்து சுமார் 9,500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பீடு பெறும் நிலைக்கு தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் புள்ளிவிபரம்
பரப்பளவில் பெரிய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, சட்டீஸ்கர், குஜராத், ஹிமாசல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் பஞ்சாப் போன்றவற்றிற்கு உத்தேசமாக 5600 கோடி ரூபாயும், சிறிய மாநிலங்களான கோவா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சுமார் 3900 கோடி ரூபாயும் இழப்பீடு தேவைப்படும் என்றும் தனியார் நிறுவனத்தின் புள்ளிவிவரக்குறிப்பு தெரிவிக்கிறது.