ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவை விட அதிக தங்கம் வைத்திருக்கும் 3 கேரள நிறுவனங்கள்
கொச்சி: சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரலேயாவை விட கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் அதிக தங்கம் உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியர்களில் பலர் தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். அதிலும் கேரளாவில் 2 லட்சம் பேர் தங்கம் தொடர்பான துறையில் தான் வேலை செய்கிறார்கள். கேரளாவில் நடக்கும் திருமணங்களில் பெண்கள் கழுத்தில் இருந்து வயிறு வரை தங்க நகை அணிவதை பார்க்கலாம்.
இந்நிலையில் தான் கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் அளிக்கும் நிறுவனங்களிடம் உள்ள தங்கம் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
3 நிறுவனங்கள்
முத்தூட் பைனான்ஸிடம் 116 டன் தங்கமும், மணப்புரம் பைனான்ஸிடம் 40 டன் தங்கமும், முத்தூட் பின்கார்ப்பிடம் 39 டன் தங்கமும் உள்ளது. இந்த 3 மூன்று நிறுவனங்களும் தங்கத்தை வாங்கிக் கொண்டு கடன் அளிப்பவை ஆகும்.
சிங்கப்பூர்
முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் மற்றும் முத்தூட் பின்கார்ப்பிடம் மொத்தம் 195 டன் தங்கம் உள்ளது. இது சிங்கப்பூர்(127 டன்), ஸ்வீடன்(126 டன்), தென்னாப்பிரிக்கா (125 டன்), மெக்சிகோ(123 டன்) ஆகிய நாடுகளின் தங்க இருப்பை விட அதிகம்.
முத்தூட் பைனான்ஸ்
கேரளாவின் மிகப்பெரிய தங்க நகை கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸிடம் கிரீஸ்(112.4 டன்), ஆஸ்திரேலியா(79.9 டன்), குவைத்(79 டன்), டென்மார்க்(66.5 டன்), பின்லாந்து(49.1 டன்) ஆகிய நாடுகளை விட அதிக தங்கம் உள்ளது.
அமெரிக்கா
உலக அளவில் அமெரிக்கவிடம் தான் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 134 டன் தங்கம் இருப்பு உள்ளது. இந்த பட்டியலில் 558 டன் தங்கத்துடன் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.
முத்தூட் பைனான்ஸ் கிளைகள்
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்கு 21 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 265 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தூட் பின்கார்ப்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முத்தூட் பின்கார்ப்பிடம் 41 டன் தங்கம் இருந்தது. தங்க விலை சரிவு மற்றும் தங்க கடன் விவகாரத்தில் வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கை ஆகியவற்றால் முத்தூட் பின்கார்ப்பின் தங்க கையிருப்பு குறைந்துவிட்டது.