நவம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!
டெல்லி: இந்தியா முழுவதும் வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க தயாராக உள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியபோது, "ஊதிய மறுஆய்வை வலியுறுத்தி அடுத்த மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த போராட்டத்தில் கிராம வங்கி ஊழியர்களும் பங்கேற்பார்களா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பெங்களூரில் கடந்த 13 ஆம் தேதி வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 30 ஆம் தேதி மாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், நவம்பர் 11 ஆம் தேதி அனைத்து வங்கிகள் முன்பும் போராட்டம் நடத்தப்படும்.
மேலும், தென்மண்டலத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தப்படும். வடக்கு மண்டலத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் டிசம்பர் 4 ஆம் தேதியும் இந்த போராட்டம் தொடங்கும். மேற்கு மண்டலத்தில் 5 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
எங்களது கோரிக்கைகளை அரசிடம் கடந்த 2 ஆண்டுகளாக தெரிவித்து வருகிறோம். 13 முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் மத்திய அரசு திருப்திகரமான எந்த முடிவையும் எடுக்கவில்லை.
குறிப்பாக ஊதிய மறுஆய்வை மறுப்பதோடு, தொடர்ந்து காலம் கடத்தியும் வருகிறார்கள். இருப்பினும் வங்கி ஊழியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அரசின் திட்டப்பணிகளை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.