'இவங்களுக்கெல்லாம் கடன் கொடுத்தா வரவே வராது...!'- வங்கிகளின் அதிரடி முடிவு
டெல்லி: ரூ 6.70 லட்சம் கடன் தொகையை சரியாக திரும்பச் செலுத்தாத கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு மறுகடன் தரமுடியாது என வங்கிகள் அதிரடியாக முடிவு செய்துள்ளன.
இதனால் கடன் தொகையிலேயே காலத்தை ஓட்டிய பல நிறுவனங்கள் தத்தளிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியாவில், 500 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள மொத்தக் கடன் ரூ 11.80 லட்சம் கோடி.
இவற்றில் நிறுவனங்கள் ஒழுங்காக திரும்பச் செலுத்தாததால், மறுசீரமைக்கப்பட்ட கடன் ரூ 5.10 லட்சம் கோடி. அதாவது பணத்தைக் கட்டாததால், பழைய கடனை புதுக் கடனாக மாற்றியது.
மீதி 6.70 லட்சம் கோடி ரூபாய் கடனையும் இதே போல மறுசீரமைக்க நிறுவனங்கள் கோருகின்றன. ஆனால் இது வேலைக்காகாது... படு நட்டத்தையே தரும் என வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதனால் 240 நிறுவனங்கள், மறுகடன் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்களும் அடங்கும்.
இவர்களுக்கான கடன்களை மறுசீரமைத்து மீண்டும் கடன் வழங்கினால், அந்தத் தொகையை திரும்பப் பெறுவது கஷ்டம் என்று வங்கிகள் கருதுகின்றன.
இதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் கடன்களை அடைக்க தங்கள் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளன.
இவற்றில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் மட்டுமே ரூ 60 ஆயிரம் கோடி மதிப்புக்கு சொத்துக்களை விற்கிறது. இந்த நிறுவனத்துக்கு உள்ள மொத்த வங்கிக் கடன் 1.25 லட்சம் கோடி!
எஸ்ஸார் குழுமம், ஜிஎம்ஆர், அதானி உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் கடன்களை அடைக்க சொத்துக்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வழக்கமாக இந்த வங்கிக் கடன்கள் வெளியிலேயே தெரியாது. ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், இந்த வங்கிக் கடன் விவரங்களை வெளிப்படையாக்க வேண்டும், வராக் கடன்களை நிச்சயம் வசூலித்தாக வேண்டும் என கடுமையாக இருந்ததன் விளைவாகவே, இத்தனை காலமும் இல்லாமல் இப்போதுதான் பெரும் நிறுவனங்களின் வங்கிக் கடன் விவரங்கள் வெளியில் வந்துள்ளன.