வரத்து அதிகரிப்பு: பாவூர்சத்திரத்தில் சிறுகிழங்கு விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
நெல்லை: பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறுகிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
அம்பாசமுத்திரம், கடையம், ரவணசமுத்திரம், ஆம்பூர், மண்ணார்கோவில், மத்தியூர், கருத்தபிள்ளையூர், இடைகால், துப்பாக்குடி, உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் இந்தாண்டு சிறுகிழங்கு அதிகம் பயிரிட்டுள்ளனர். விளைந்த சிறுகிழங்கை தோண்டி எடுத்த பிறகு மூன்று ரகமாக தரம் பிரித்து மூட்டைகளில கட்டி விற்பனைக்கு நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த கிழக்கு இரண்டு மாதம் வரை விற்பனையாகும். இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வர். அப்படி வாங்கி செல்லும் வியாபாரிகள் கேரள மாநிலம் கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு, சங்கணாச்சேரிக்கும், சென்னை கோயம்பேடு, திருச்சி மார்க்கெட்டுக்கும் தரம் வாரியாக பிரித்து அனுப்புகின்றனர். கடந்த வாரம் 100 முதல் 700 மூட்டை வரை சிறுகிழங்கு வரத்து இருந்ததால் கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்து வருவதால் முதல் ரகம் ரூ.30 முதல் ரூ.32 வரையும், இரண்டாம் ரகம் ரூ.25 முதல் ரூ.27 வரையும், மூன்றாம் ரகம் ரூ.5 முதல் ரூ.10 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இனி வரும் நாட்களில் இதை விட கூடுதலாக சிறுகிழங்குகள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்னும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பருவமழை சரியாக பெய்யாததால் சிறுகிழங்கு நடுவையில் விவசாயிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. தற்போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மேலும் கவலை அடைந்துள்ளனர்.