14,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் சிஸ்கோ: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நியூயார்க்: அமெரிக்க நிறுவனமான சிஸ்கோ 14 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக தொழில்நுட்ப செய்தி இணையதளமான சி.ஆர்.என். தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கணக்கின்படி அமெரிக்க நிறுவனமான சிஸ்கோவில் 73 ஆயிரத்து 100 பேர் பணியாற்றினர். இந்நிலையில் சிஸ்கோ 14 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக தொழில்நுட்ப செய்தி இணையதளமான சி.ஆர்.என். தெரிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு சிஸ்கோ நிறுவனம் 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிஸ்கோ ஹார்டுவேரில் இருந்து சாப்ட்வேர் தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதால் சாப்ட்வேர் குறித்து அறிந்த தொழிலாளர்கள் தேவைப்படுவதால் இந்த பணிநீக்கம் என்று சி.ஆர்.என். தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறும் திட்டத்தையும் அறிவித்துள்ளது சிஸ்கோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எத்தனை பேருக்கு வேலை போகும் என்பது தெரியவில்லை. இருப்பினும் கடந்த சில வாரங்களில் இந்தியாவில் சிஸ்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வேலையை விட்டு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.