உசந்து நிக்கும் உளுந்து... கழுத்தை நெரிக்கும் துவரம் பருப்பு - ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு!
சென்னை: தமிழகத்தில் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. எனினும், எண்ணெய் வகைகளின் விலை குறைந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கின்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத்தலைவர் எஸ்.பி. சொரூபன், "புரட்டாசி மாதம் தொடங்கியதை தொடர்ந்து காய்கறிகள் மீதான தேவை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் வடமாநிலத்தில் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததின் காரணமாக பருப்பு வகைகளின் தேவை தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மேலும் ஆன் லைன் வர்த்தகம் காரணமாகவும் பருப்பு வகைகள் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதனால் கென்யா, தான்சானியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூபாய் 12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை உளுந்தம் பருப்பு தற்போது ரூபாய் 13 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் 13,500 க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம்பருப்பு ரூபய்14,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 ஆம் தர துவரம்பருப்பு ரூபாய் 12 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 13 ஆயிரத்துக்கும், தான்சானியா துவரம்பருப்பு ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 11 ஆயிரமாகவும் விலை அதிகரித்துள்ளது.
அதேவேளையில் இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரத்து அதிகரித்ததின் விளைவாகவும், உள்நாட்டு தயாரிப்பு விகிதம் உயர்ந்துள்ளதாலும் எண்ணெய் வகைகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி, ரூபாய் 220 ஆக இருந்த ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூபாய் 185 க்கும், காங்கேயம், பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதியாகும் நல்லெண்ணெய் ரூபாய் 180 இல் இருந்து ரூபாய்150 க்கும், விளக்கெண்ணை ரூபாய் 100 இல் இருந்து ரூபாய் 75க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் 170க்கும், 2 ஆம் தரம் ரூபாய் 180 இல் இருந்து ரூபாய் 150க்கும், வனஸ்பதி ரூபாய் 90 இல் இருந்து ரூபாய் 80க்கும் விலை குறைந்து உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.