செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு... கோவில் உண்டியல் வசூலும் குறைஞ்சு போச்சே!
உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணத்தால் கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களின் நன்கொடை வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளாதாம்.
மும்பை: மனிதர்களுக்கு சோதனை வந்தால் தெய்வத்திடம் செல்வார்கள். அந்த தெய்வத்திற்கே சோதனை வந்தால் எங்கே செல்வார்கள். பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு நிலைமை அப்படித்தான் போய்விட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் 1000 ரூபாய் 500 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பணப்பஞ்சம் பணக்காரர்கள் முதல் சாமானிய
மக்கள் வரை பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 90 நாட்களாகிவிட்டது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கைகளில் பணம் புழங்கத் தொடங்கியுள்ளது.
ஏடிஎம்களின் பயன்பாடு இன்னமும் சரியாகவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏடிஎம்கள் திறந்துள்ளன. புத்தாண்டு பிறந்ததும் இந்த ஆண்டாவது நமக்கு நல்ல வருஷமாக இருக்க வேண்டும், நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள நாம் அனைவரும் நமக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று பிரார்த்திப்போம்.
கோவில் வருமானங்கள்
நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்க வில்லை என்றால் அந்த தெய்வங்களை திட்டுவோம். ஆனால், அந்த தெய்வங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரவில்லை என்றால் யாரிடம் போய் முறையிடும் என்று தெரியவில்லை.
கோவில் காணிக்கை
பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பு கோவிலுக்கு வருபவர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள அர்ச்சனை செய்யவும், காணிக்கை செலுத்தவும் சிறப்பு தரிசனம் செய்யவும், நன்கொடை வழங்கவும் பெரும்பாலும் ரொக்கமாகவே செலுத்தி வந்தனர்.
உண்டியல் வசூல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் பெரும்பாலானோர் கோவில்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர். அப்படியே வந்தாலும் அர்ச்சகர் தட்டில் 5 ரூபாயோ அல்லது 10 ரூபாயோ போட்டுவிட்டு நடையை கட்டுகின்றனர். இதனால், உண்டியல் வசூல், கோவில் நன்கொடை வசூல் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நன்கொடை சரிவு
மத்திய அரசு மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு ஊக்கமளித்தாலும், இன்னும் பெரும்பாலான கோவில்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், நன்கொடை அளிக்க முன்வருபவர்களும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். இதன் காரணத்தால் நன்கொடை வசூல் சரிவடைந்தது.
கடும் வீழ்ச்சி
மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில், குருவாயூர் கோவில், சீரடி சாய்பாபா கோவில் மற்றும் பிற கோவில்களின் உண்டியல் வசூல் மற்றம் நன்கொடை வசூலும் கடந்த ஜனவரி மாதத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
சரிந்தது ஏன்?
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நன்கொடை வசூல் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், அதே சமயம், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நன்கொடை வசூலானது அபரிமிதமாக இருந்தது.
கோவில்களில் பாதிப்பு
பெரும்பாலும் ஆங்கில புத்தாண்டு அன்று அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் கூட்டம் அலைமோதும். அதே போல், சிறப்பு பிரார்த்தனை டிக்கெட் மற்றும் நன்கொடை வசூலும் அதிகமாக வசூலாகும். ஆனால், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு கோவிலைக்கூட விட்டு வைக்காமல் படுத்தி எடுத்துவருகின்றது.
கட்டமைப்பு வசதி
இந்த நடவடிக்கை இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற கோவில்களைக்கூட விட்டுவைக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குறிய விசயமாகும்.இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசானது, மின்னணு பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.