பபுள்கம், சூயிங்கம் பிரியர்களின் வாயைக் கட்டிய மத்திய அரசு... ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தாறுமாறான விலையே
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு விற்ற பபுள்கம் விலை 28% உயரும் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லி: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் பபுள்கம் அல்லது சூயிங்கத்தின் விலை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக, 28% வரை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பபுள்கம் பயன்பாடு வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகும். சாக்லேட் போல, பபுள்கம் பயன்படுத்தப்படுகிறது. பெட்டிக்கடைகளில் இருந்து, ஷாப்பிங் மால்கள் வரை, சில்லறை இல்லை என்றால், பபுள்கம், சாக்லேட் போன்றவற்றை மாற்றுப் பொருளாகக் கொடுப்பார்கள்.
இதில், பபுள்கம் அல்லது சூயிங்கத்தின் விலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ரூ.1 என்ற விலையில்தான் விற்கப்பட்டு வருகிறது. இதனால், பபுள்கம் பயன்படுத்த அந்தஸ்து, பெரிய அளவில் வருமானம் எதுவும் தேவையில்லை.
ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு மூலமாக, பபுள்கம், சிக்லட் மற்றும் சாக்லேட்கள், புளிப்பு மிட்டாய்கள் உள்ளிட்டவற்றுக்கு, மத்திய அரசு 28% வரி விதிப்பை கொண்டுவர தீர்மானித்துள்ளது.
ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வர உள்ளது. அப்போது, யார் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ, சாதாரண பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். காரணம், இந்த எளிய பொருட்களின் விலை கிடுகிடுவென ஏறப் போவதுதான்.
இது மட்டும் இல்லை , ரூ.1க்கு இனி எந்த பொருளுமே விற்கப்படாமல் போகும். அப்படியானால், விரைவிலேயே ரூ. 1 நாணயம் புழக்கத்தில் இருந்தே மறைந்துவிடும்.