வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு... அவசியமான 4 காரணங்கள்!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 2016-17ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 கடைசிநாள் என்று கூறப்பட்டதால் விடுமுறை நாளான நேற்றும் வரிசையில் காத்திருந்து கணக்கு தாக்கல் செய்தனர். வருமானவரி கணக்குத்துறையின் சர்வர் முடங்கியதை அடுத்து 5 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் சம்பளதாரர்கள், தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத சிறிய வியாபாரிகள், எல்.ஐ.சி. முகவர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் போன்றவர்கள் 2016-2017-ம் நிதி ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி திங்கட்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 5 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2 லட்சம்
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பிறகு ரூபாய் 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக வங்கிக் கணக்கில் செலுத்தி இருந்தால் அது குறித்து வருமான வரித்தாக்கல் செய்யும் படிவத்தில் தெரிவிக்கவேண்டியது அவசியம். அப்படி வருமான வரித்தாக்கல் உரிய காலக் கெடுவிற்குள் செய்யவில்லை என்றால், வருமான வரி துறையில் இருந்து உரிய விளக்கம் கேட்டு விளக்க நோட்டீஸ் வீடு தேடி வரும். இதனை தவிர்க்கவாவது உரிய காலக்கெடுவிற்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வது மிக அவசியம்.
வரிபாக்கி
உங்களின் நிதி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் வருமான வரித்துறை கண்கொத்திப்பாம்பாக கவனித்துகொண்டிருக்கும். எனவே உங்களின் அனைத்து வருமானங்களையும் அதற்கான வரிப்பிடித்தங்களையும் உங்களின் வரிப்பிடித்த கணக்கில் (Form 26AS) வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உரிய காலத்திற்குள் சரி பார்த்து, ஏதேனும் வரி பாக்கி (Tax Liability) உள்ளதா என்பதையும் சரி பார்த்து உரிய காலக்கெடுவிற்குள் வரி பாக்கியை செலுத்திவிட வேண்டியது அவசியமாகும். மேலும், ஆதார் எண்ணையும் பான் எண்ணுடன் இணைத்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது தேவையில்லாத காலதாமதம் ஏற்பட்டுவிடும்.
காலக்கெடுவிற்குள் கணக்கு தாக்கல்
நீங்கள் வருமான வரிக்கணக்கை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானவரித் துறையில் இருந்து உங்களுக்கு விளக்க நோட்டீஸ் வந்து விடும். இதனால், உங்களுக்கு வரவேண்டிய உபரி வரிப் பயன்பாடு (Tax Refund) மற்றும் வரிப் பயன்பாட்டிற்கு கிடைக்கும் வட்டியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே உரிய காலக் கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும்.
சிக்கல் என்ன?
கடந்த நிதி ஆண்டில் உங்களுக்கு வருவாய் இழப்பு, அதாவது ஊக வணிகம் மற்றும் லாட்டரி மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பு, மூலதான ஆதாயங்கள் (Capital Gain) மற்றும் பிற வகைகளின் மூலம் ஏற்பட்ட வருவாயையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், அந்த வருவாய் நட்டத்தை அடுத்த வருடத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
Recommended Video
1 சதவிகித வட்டி
மேலும், வரி பாக்கி ஏதேனும் இருந்தால், வருமான வரிக்கணக்கை உரிய காலக் கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால், வரி பாக்கிக்கு அபராதம் மற்றும் மாதத்திற்கு 1 சதவிகிதம் வட்டியாக வசூலிக்கப்படும். இந்த வட்டியானது வருமான தாக்கல் செய்வதற்குறிய காலக்கெடு நாளிலிருந்து நீங்கள் என்றைக்கு வரிக்கணக்கை தாக்கல் செய்கிறீர்களோ அன்றைய தேதி வரைக்கும் கணக்கிட்டு வசூலிக்கப்படும். எனவே இந்த தேவையற்ற கூடுதல் சுமையை தவிர்க்க உரிய காலக் கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும்.