வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு
டெல்லி: உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்படி உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை டன்னுக்கு 450 டாலராக நிர்ணயம் செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், உருளைக்கிழங்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்த அதற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 450 டாலர் (ரூ.27000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த விலைக்கு குறைவான விலைக்கு உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளிக்காது.
விலை உயர்வைத் தடுக்கும்
உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இது உள்நாட்டு சப்ளையை அதிகரிக்கும். விலை ஏற்றத்தையும் தடுக்கும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயம்
உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்றுமதி, இறக்குமதிக்கு குறைந்தபட்ட ஆதரவு விலை நிர்ணயம் செய்ய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்த பட்ட ஆதரவு விலை 300 டாலராக கடந்த 17ம் தேதி நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.
உருளைக் கிழங்கு
இந்த நிலையில் டெல்லியில் உருளைக்கிழங்கு கிலோ 30ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலை உயர்வு ஏற்படாமல் தடுக்க வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக்கும் ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கின் விலை 31.44 சதவிகிதம் அதிகரித்ததும், பழங்கள் விலை 19.40 சதவிகிதம் மற்றும் அரிசியின் விலை 12.75 சதவிகிதம் அதிகரித்ததும் பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.