வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: அருண் ஜெட்லி எச்சரிக்கை
டெல்லி: வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வரி விலக்கு, கருப்புப் பணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது :-
வரி விலக்கு...
மத்திய அரசின் முழு அளவிலான பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறேன். கடந்த பட்ஜெட்டில் வரி விலக்குக்கான வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தினேன். போதிய நிதி ஆதாரங்கள் இருந்திருந்தால் இந்த வரம்பை மேலும் உயர்த்தி இருப்பேன்.
சேமிப்பு...
தற்போது மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் பெறுவோர் சிறிதளவு பணத்தை சேமித்தால், வருமான வரி செலுத்த வேண்டியது இருக்காது.
விலைவாசி, போக்குவரத்து...
ஆனால் விலைவாசி, போக்குவரத்து செலவு, குழந்தைகளுக்கான படிப்பு செலவு ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்த வருவாய் உள்ளவர்கள் சேமிப்பது என்பது இயலாத காரியம்தான்.
கடுமையான நடவடிக்கை...
மாத சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்த விரும்பவில்லை. அதேசமயம் வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைமுக வரி வசூல்...
வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தினால் வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருக்கும். இதனால் அவர்கள் அதிகம் செலவிடுவார்கள். அப்போது அரசுக்கு மறைமுக வரி வசூல் அதிகமாகும்.
வருவாய் பெருகும்...
அரசுக்கு கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட பாதி அளவு உற்பத்தி வரி, கலால் வரி, சேவை வரி போன்ற மறைமுக வரிகள் மூலம்தான் கிடைக்கிறது. எல்லோருமே மறைமுக வரி செலுத்துகிறார்கள். எனவே வரி விதிப்பு இனங்களை அதிகரிப்பதன் மூலம் வரி வருவாயை பெருக்க முடியும்.
கருப்புப் பணம்...
நாட்டினுள் பதுக்கப்படும் கருப்புப் பணம் அளவில் மிகப்பெரியது. ஆனால் சுலபத்தில் கண்டுபிடித்து விடக்கூடியது. ஏனெனில் ஒருவர் ரியல் எஸ்டேட் செல்கிறார், நிலம் வாங்கச் செல்கிறார், சுரங்கத் தொழிலுக்குச் செல்கிறார், நகைக்கடைக்குச் செல்கிறார், ஆடம்பரப் பொருட்களுக்குச் செல்கிறார்.
தடம் காண்பது எளிது....
இந்த இடங்களில் நாம் அதிகமாக கருப்புப் பண புழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுங்கள் அங்கும் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க முடியும். எனவே வாங்குவோர், விற்போரை தடம் காணுவது எப்போதும் எளிதானது" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.