ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் பணவீக்கம் அதிகரிக்கும் - கிரிசில் எச்சரிக்கை
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் அத்தியவசியப் பொருட்களின் விலை கண்டிப்பாக உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி: ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் பொருட்கள் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற கிரிசில் தரச்சான்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விதமான எளிமையான வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை ஆகும்.
அனைத்து மாநிலங்களுடனும் நடத்தப்பட்ட பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு, ஜி.எஸ்.டி வரிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. பின்னர் இதற்கான சட்ட மசோதா கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதலில் வரும் 2017-18ம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து நடைமுறைப்படுத்த ஏற்பாடானது. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் எழும் என்பதால் 2017-18ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
இதனை அடுத்து சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுவருகிறது.
விலை உயர வாய்ப்பு
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பிரபல தரச்சான்று நிறுவனமான கிரிசில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில்லறை பணவீக்கம்
இதுபற்றி கருத்து கூறிய இந்நிறுவனத்தின் பொருளாதார ஆய்வாளர் டி.கே.ஜோஷி, "ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் அத்தியவசியப் பொருட்களின் விலை கண்டிப்பாக உயரக்கூடும். இதன் தாக்கம் சில்லறை பணவீக்கத்திலும் எதிரொலிக்கும்" என்று எச்சரிக்கிறார்.
நுகர்பொருள் சில்லறை பணவீக்கம்
ஐ.டி.எஃப்.சி வங்கியின் தலைமை பொருளாதார ஆய்வாளர் இந்திரானில் பான் இது பற்றி கூறும்போது "சராசரியாக நுகர்பொருள் சில்லறை பணவீக்க விகிதமானது வரும் 2017-18ஆம் நிதி ஆண்டில் 4.5 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்றார். மேலும், மார்ச் மாதத்திய நுகர்பொருள் சில்லறை பணவீக்க விகிதமானது 4 சதவிகிதத்தை தாண்டக்கூடும்" என்றும் அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை எந்த அளவிற்கு குறைக்கும் என்று தெரியவில்லை. அதே சமயம், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று தெரிகிறது. ரிசர்வ்
வங்கியின் இந்த நடவடிக்கையைப் பொருத்தே பணவீக்க விகிதத்தின் போக்கு இருக்கக்கூடும் என்றும் இந்திரானில் பான் கருத்து தெரிவித்தார்.
பணத்தட்டுப்பாடு
கடந்த ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதமானது 3.17 சதவிகிதமாகவும் பிப்ரவரி மாதத்தில் சற்று உயர்ந்து 3.65 சதவிகிதமாகவும் காணப்பட்டது. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களுக்கும் கடுமையான பாதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் தங்களின் தேவையை குறைத்துக்கொண்டனர். இதனால், துரித நகர்வு நுகர்பொருட்களான (Fast moving consumer goods) ஆடை அணிகலன்கள், காலணிகள், உணவு மற்றும் பொழுதுபோக்கு அம்சம் போன்றவற்றின் விற்பனை குறைந்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதமானது குறைந்தது.
கட்டுப்பாடு நீக்கம்
தற்போது, ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டதால், பணப்புழக்கம் அதிகரித்து துரித நகர்வு நுகர்பொருட்களின் விற்பனை அதிகரிக்கக்கூடும்
என்பதால் சில்லறை பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.