ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் கறுப்பு பண புழக்கத்தை தடுத்து விட்டது: அருண் ஜெட்லி
உள்நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கவும் ஷெல் நிறுவனங்களை கண்டறியவும் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
டெல்லி: நிறுவனங்கள் மட்டும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களால் நேரடி பணப்பரிவர்த்தனை கடினமாகியுள்ளது. இதன் காரணமாக வரி தாக்கல் செய்வது அதிகமாகும். மேலும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பொருளாதார கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். கறுப்பு பண புழக்கம் பற்றியும், ஜிஎஸ்டி வரி, பணமதிப்பு நீக்கம் பற்றியும் விளக்கமாகவும் தெளிவாகவும் பேசியுள்ளார் ஜெட்லி.
கறுப்பு பணம்
மத்திய வருவாய்த் துறை நடத்திய ஆய்வு குறித்து சில தினங்களுக்கு முன்பு லோக்சபாவில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த 700 பேர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வரி ஏய்ப்பு செய்து அல்லது குறைவாக வரி செலுத்தி மீதித் தொகையை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் சேர்த்து வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகள்
இந்த ஆய்வின் மூலம், ரூ.11,010 கோடி வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வந்த 71 புகார்களில் 31 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுவிட்சர்லாந்தில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் 628 பேர் கணக்கு வைத்துள்ளனர்.
சட்டவிரோத பணப்புழக்கம்
அந்த வங்கிக் கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தியபோது அதில் ரூ.8,437 கோடி பணம் இருப்பது தெரிய வந்துள்ளது (மே மாதம் வரையிலான கணக்குப்படி). சட்டவிரோதமாக பணத்தை மறைத்து வைத்த குற்றத்திற்காக 162 வழக்குகளுக்கு ரூ.1,287 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 199 கிரிமினல் வழக்குகளில் 84 புகார்களுக்கு வழக்குப் பதியப்பட்டுள்ளது"என்று லோக்சபாவில் தெரிவித்தார்.
கறுப்பு பணத்தை மீட்க சட்டம்
பொருளாதார கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல உள்நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கவும் ஷெல் நிறுவனங்களை கண்டறியவும் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வரி ஏய்ப்பு செய்ய முடியாது
வரி தாக்கல் செய்யாமல் நிறைய நிறுவனங்கள் வரி அமைப்புக்கு வெளியே இருந்து வருகின்றன. இந்த நிறுவனங்களிடம் பெரும் பண பரிவர்த்தனை நிகழ்ந்து வருகிறது. ஆனால் தற்போது இந்த நிறுவனங்கள் உதவியற்றதாக ஆகி விட்டன. தற்போதைய சூழலை சந்திக்க வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட மாற்றம் அதனுடன் தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தற்போது நேரடி பணப்பரிவர்த்தனை மிக கடினமாகியுள்ளது. இதனால் வரி தாக்கல் செய்வது அதிகமாகும். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்து வருகிறது.
அரசியல்வாதிகள் அதிகாரிகள்
மத்திய அரசு முதல் நடவடிக்கையாக, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு அடுக்குகளை கொண்ட ஷெல் நிறுவனங்களிடம் இந்த பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
முறைகேடாக பதுக்கல்
நிறுவனங்கள் மட்டும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இதுமட்டுமல்ல பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்நாட்டில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துகளை கண்டறிய முடியும். வருவாய்த் துறை இதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.
கறுப்பு பணத்தால் முதலீடு
70 ஆண்டு கால இந்திய ஜனநாயகம் முழுவதும் கருப்புப் பணத்தால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசுகள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்றம் என அனைத்தும் கண்ணுக்கு புலப்படாத பணத்தால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர தீர்வு
70 ஆண்டு கால இந்திய ஜனநாயகம் எப்படி இயங்குகிறது என்பதை தேர்தல் ஆணையம் சோதனை செய்யத் தவறிவிட்டது.வெளிப்படையான முறைகளே எதிர்காலத்தில் இதற்கு தீர்வாக அமையும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.