ஜிஎஸ்டி வரி எதிரொலி... சேவைத் துறை அதிரடி வீழ்ச்சி
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் சேவைதுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரிமுறை அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் சேவை துறையானது வீழ்ச்சியடைந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் சேவைத்துறை கடும் சரிவை சந்தித்துள்ளதாக பி.எம்.ஐயின் ஆய்வு தெரிவிக்கிறது.
நிக்கி இந்தியா சேவை நிறுவனத்தின் தொழில் செயல்திறன் குறியீடு ஜூன் மாதத்தில் 53.1 ஆக இருந்துள்ளது. ஆனால் ஜூலை மாதத்தில் 45.9 ஆக குறைந்துள்ளது. இது 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்நிறுவனம் சந்திக்கும் அதிகபட்ச சரிவாகும்.
ஜிஎஸ்டி வரிமுறையில் விற்பனைத் துறையில்(Goods)5,12,18 மற்றும் 28 சதவிகிதம் என்று நான்கு விதமாக வரிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேவை துறையைப் பொருத்த வரையில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து விதமான சேவை துறைகளுக்கும் (Services) ஒரே விதமாக 18 சதவிகிதம் வரியே அமல்படுத்தப்பட்டது.
18 சதவிகித வரி
சேவை துறைக்கு 18 சதவிகிதம் என்பது மிக அதிகம் என்று ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தொழில்நுட்பம், விளம்பரம், ஆலோசனை, லாஜிஸ்டிக்ஸ், மென்பொருள் உள்ளிட்ட சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் அதிருப்தியை வெளிக்காட்டினர்.
சேவைதுறையின் நிலை
சேவைத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித வரிமுறையை 12 அல்லது 15 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அப்படி இல்லாமல் 18 சதவிகித வரியை அமல்படுத்தினால். சேவைத் துறையானது கடுமையான வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் கவலை தெரிவித்தனர்.
சரக்கு மற்றும் சேவை வரி
ஆனால், தொழில் துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல், சேவைத் துறைக்கு 18 சதவிகித வரிமுறையையே அமல்படுத்தியது. இதனால், கடந்த ஜூலை மாதத்தில் சரக்குகள் (Goods) முழுவீச்சில் செயல்படத்தொடங்கியும், சேவைத் துறையானது எதிர் திசையில் பயணிக்கக் தொடங்கியது.
சேவை துறை வளர்ச்சி
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்பு உற்பத்தித் துறையும், விற்பனைத் துறையும் வேகம் எடுத்தாலும், சேவை துறைக்கு புதிதாக பணிகளை ஒதுக்குவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. இதனால், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சேவை துறையானது 53.1 சதவிகிதமாக இருந்தது. அதுபோலவே இந்த ஆண்டின் ஜூன் மாதத்திலும் 53 சதவிகிதமாக இருந்தது.
ஜிஎஸ்டி அமல்
ஆனால், ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்பு, கடந்த ஜூலை மாதத்தில் சேவை துறையானது கடுமையாக சரிவை சந்தித்து 46 சதவிகிதம் என்ற அளவை எட்டியது. இந்த புள்ளி விவரத்தை ஒரு தனியார் துறை எடுத்த சர்வே அறிக்கையும் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இந்த புள்ளி விவர அறிக்கையானது,கடந்த புதன்கிழமை அன்று ரிசர்வ் வங்கியின் நிதிக் குழு (Monetary Policy Committee) வெளியிட்ட வட்டி குறைப்பு அறிவிப்புக்கு பின்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
பிரகாசமான வாய்ப்பு
குறுகிய காலத்தில் சேவை துறையானது வீழ்ச்சி கண்டது போல இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது சேவை துறைக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி குறித்து குழப்பங்கள் இருப்பதாகவும், அதுபற்றி தெளிவு வேண்டும் என்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.