ஜிஎஸ்டி : 12% 18% வரி விகிதங்களில் மாற்றம் வரலாம் - அருண் ஜெட்லி
12%மற்றும் 18% வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 15 சதவிகிதம் என மாற்றப்படலாம் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் எதிர்காலத்தில் மாற்றப்படலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
12 மற்றும் 18 சதவிகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 15 சதவிகிதம் என மாற்றப்படலாம் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 5%, 12%, 18%, 28% என்னும் நான்கு விகிதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 0% என்னும் வரி விகிதத்தின் கீழ், உணவுப் பொருட்கள், கல்வி, மற்றும் மருத்துவ சேவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு
இந்த வரி விகிதங்கள் நான்காக பிரிக்கப்பட்டதற்கு, பல்வேறு விமர்சனங்களும், புகார்களும் எழுந்தன. வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யக்கோரியும் பலதரப்புகளில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டது.
வரிகளில் மாற்றம் வரலாம்
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடம்பர பொருட்களுக்கும், சாமானிய மக்களுக்கான தேவைகளுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது. தேவைப்பட்டால் சில வரி விகிதங்கள் எதிர்காலத்தில் ஒன்றாக இணைக்கப்படலாம்.
15 சதவிகிதமாக மாறலாம்
அதாவது, 12 மற்றும் 18 சதவிகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 15 சதவிகிதம் என மாற்றப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில், 15 சதவிகிதம் என்ற வரி விகிதத்தை உருவாக்கினால், முழு வரி விலக்குடன் ஏழைகள் பெறும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதம் மாறலாம். இதனால் ஏழைகள் பாதிப்புக்குள்ளாகலாம்.
ஏழைகளுக்கான வரி
ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டும், குறைவான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டும் உள்ளது. பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடுத்தரவர்க்கத்தினர்
நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஓரளவுக்கு குறைவான அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் மறைமுக வரி விதிப்பு முறையின் கொள்கையாக இருந்து வந்துள்ளது எனவும் அருண் ஜெட்லி கூறினார்.
எனவே தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள், எதிர்காலத்தில் திருத்தப்படும் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.