வீடு, கடை வாடகை வருமானம் ரூ.20 லட்சத்திற்கு அதிகமானால் ஜிஎஸ்டி வரி அவசியம்
டெல்லி: வீடு மற்றும் கடை வாடகை மூலம் வரும் வருமானத்திற்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கட்டிடங்களை வணிக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தச் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1ஆம் தேதி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீடு, கட்டிடங்களை வர்த்தக ரீதியில் வாடகை அல்லது ஒத்திகைக்கு விடுவதன் மூலம் ரூ.20 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கிடைக்கும் பட்சத்தில், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி செலுத்தியாக வேண்டும் என மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டியில் எந்த வரியும் இல்லை என்று ஹஸ்முக் ஆதியா கூறியுள்ளார். அதே நேரத்தில் வர்த்தக ரீதியில் வாடகை பெறும்போது, அவ்வருமானம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதற்கு வரி வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வாடகை பெறுபவர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதே சமயம், குடியிருப்பு, கடை அல்லது அலுவலக வாடகை மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் ஈட்டுவோருக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்றும் ஹஸ்முக் ஆதியா கூறியுள்ளார்.