ஒரே தேசம் ஒரே வரி.... தெரிந்து கொள்ளுங்கள் ஜிஎஸ்டி
ஜூலை 1 முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அமலாக உள்ளது.
டெல்லி: 1947ல் சுதந்திரம் பெற்ற பின்னர் நடைபெற உள்ள மிகப் பெரிய வரிச் சீர்திருத்தத்திற்கு நாடு தயாராகி வருகிறது.
நமது நாட்டில் பலவிதமான வரிகள் அரசு மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பலவிதமான வரிகள் விதிக்கப்படுகிறது. இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று நேர்முக வரி மற்றொன்று மறைமுக வரி.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும்.
இதன் முலம் பல்வேறு எலக்ட்ரிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மருந்து உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம்வரை வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
வடகிழக்கு மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆரம்ப வணிக தொகை ரூ.10 லட்சம் ஆகும். இதனை தவிர்த்து ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் கொண்ட வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி அறிமுக விழா 30ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கேற்கின்றனர்.
நேர்முக வரிகள்
தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, போன்றவைகள் நேர்முக வரி எனப்படும். இந்த வரியானது குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ அரசாங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும்.
மறைமுக வரி
கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரி போன்றவைகள் மறைமுக வரிகளாகும். நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள், சேவைகள் அனைத்தும் இந்த வரியை உள்ளடக்கித்தான் விலைக்கு வாங்குகிறோம். இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும்,இதனை அரசிடம் கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது.
மதிப்பு கூட்டு வரிகள்
தற்போது பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது. இதனால் பொருட்களிடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த விலைமாற்றத்திற்கான காரணம் அந்தந்த மாநிலங்களில் மாறுபடும் வரிவிதிப்பு தான். இந்த வரியால் குழப்பம்தான் நிலவி வருகிறது. இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி
தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்தையும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் இந்த ஜிஎஸ்டி. ஜி.எஸ்.டி வரியானது மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST),மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகையாக வசூலிக்கப்படும்.
வரி வசூல்
மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST) இந்த வருவாய் முழுவதும் மத்திய அரசின் மூலம் வசூலிக்கப்படும். மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) இந்த வருவாய் முழுவதும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST)மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்.
ஒரே தேசம் ஒரே வரி
நாடு முழுவதும் ஒரே வரி பின்பற்றப்படும். நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களை தீர்ப்பதற்கும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பொருட்களின் மீதான வரி குறைக்கும். விலை உயர்வு வாய்ப்புகளை தடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள வரி லாபம் நுகர்வோரை சென்றடையும் என தெரிகிறது.