அள்ளிக்கொடுத்த மமதா பானர்ஜி: ஆனந்தத்தில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள்
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ஐம்பதாயிரம் வழங்க உத்தரவிட்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
கொல்கத்தா: இந்தியாவிலுள்ள மாநில முதல்வர்களில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் மத்திய அரசை எதிர்த்து போராடக்கூடியவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ஐம்பதாயிரம் வழங்க உத்தரவிட்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்
பிரதமர் மோடியின் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைக் காட்டியவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டமும் நடத்தினார். தொடர்ந்து மூன்று மாதங்களாக போராடிக்கொண்டு இருக்கிறார்.
இதனை மனதில் கொண்டே மமதா பானர்ஜி, இந்தியாவில் எந்த ஒரு முதல்வரும் எடுக்காத துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். ஆம், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், மேற்கு வங்க மாநிலத்தில் வேலை இழந்து தவித்துவரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு வங்க மாநிலத்தின் 2017-18ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையினை அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் அமித் மித்ரா தாக்கல் செய்தார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக வேலை இழந்து தவித்துவரும் மேற்கு வங்க தொழிலாளர்களின் துயர் துடைக்கும் வகையில் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதனால், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் வேலை இழந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் அவர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் தொழில்துறை முடங்கியுள்ளது. இதனால், வேலையில்லாதிண்டாட்டம் அதிகரித்துள்ளது.
அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இவர்கள் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் வேலை வாய்ப்பை இழந்து அவல நிலையில் உள்ளனர். இவர்களின் துயர் துடைக்கவும், சுய தொழில்
தொடங்க இந்த தொகையானது ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று அமித்மித்ரா தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.இதற்காக, உயர் பணமதிப்பு நடவடிக்கையினால் வேலை இழந்தவர்களைப் பற்றிய கணக்கெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் கூறுகையில் “மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிப்பதாக மமதா பானர்ஜி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இதற்காக அவர் கணக்கெடுப்பு ஏதேனும் எடுத்துள்ளாரா?, அப்படி இருந்தால் அவர் தன்னுடைய கட்சி நிதியில் இருந்து அந்த தொகையை தருவதுதானே? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 19,351 கோடி ரூபாய் அளவிற்கு கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இருந்தபோதிலும் மமதா பானர்ஜி இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.