திருப்பதி லட்டு போல பழநி பஞ்சாமிர்தத்துக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு கிடைக்குமா?
சென்னை: திருப்பதி லட்டுக்கு ஜி.எஸ்.டி யிலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டது போல பஞ்சாமிர்தத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படுமா என்று தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருவழியாக சரக்கு மற்றும் சேவை வரி முறையானது வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் வேளையில், ஜி.எஸ்.டி வரி நிர்ணயக் குழுவானது ஒவ்வொரு மாநிலங்களின் கோரிக்கையையும் ஏற்று, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் பொருட்களின் வரி விதிகங்களையும் தினசரி மாற்றிக் கொண்டிருக்கிறது.
திருப்பதி லட்டு
அதுபோலவே, கடந்த ஞாயிறு அன்று 17வது முறையாக கூடிய ஜி.எஸ்.டி வரி நிர்ணயக் குழுவானது தற்போது திருப்பதி லட்டுவிற்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பப்பட்டிருக்கின்றது.
ஆந்திரா முதல்வர் கோரிக்கை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக ஜி.எஸ்.டி வரி நிர்ணயக் குழுவினர் தெரிவித்தனர்
முடி காணிக்கை
உலகிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் ஆகும். தினமும் லட்சோபலட்சம் பக்தர்கள் வருகை தந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விலக்கு
அவர்களின் மதநம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக, காணிக்கையாக அளித்த தலைமுடிக்கும், உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் லட்டுவிற்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கும்படி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்திருந்தார்.
முருகன் அறுபடை வீடுகள்
அதுபோலவே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தமிழ்க்கடவுள் முருகன் குடி கொண்டிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, மற்றும் மருதமலை முருகன் கோவில்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களும் உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
முருகன் பக்தர்கள்
மேலும், வைகாசி விசாகத் திருநாள், தைப் பூசத் திருநாள், பங்குனி உத்திரத் திருநாள் போன்ற விசேச காலங்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் அறுபடை கோவில்களுக்கம் யாத்திரை மேற்கொண்டு தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்துவதுண்டு.
பஞ்சாமிர்தம்
அந்த நாட்களில் அறுபடை முருகன் கோவில்களிலும் அதிக அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிக அளவில் நடக்கும். தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பஞ்சாமிர்த விலை அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவர்கள்.
அழுத்தம் கொடுப்பாரா முதல்வர்
எனவே, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வரி அமல்படுத்த இன்னும் சில தினங்களே உள்ளதால் தமிழக முதல்வரும், நிதியமைச்சரும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.