ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து முகேஷ் பன்சால் திடீர் விலகல்!
பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஃபேஷன் வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து திடீரென முகேஷ் பன்சால் விலகியுள்ளார்.
இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிறுவனம் மைன்ட்ரா நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.2,000 கோடிக்கு வாங்கியது. மைன்ட்ரா நிறுவனமும் இணையதளம் மூலம் ஃபேஷன் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமாகும்.
இதையடுத்து மைன்ட்ரா நிறுவன நிர்வாகி முகேஷ் பன்சால் ஃபிளிப்கார்ட் இயக்குநர் குழுவில் சேர்ந்து ஃபேஷன் வர்த்தகப் பிரிவை கவனித்து வந்தார். மைன்ட்ரா நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் ஃபேஷன் வர்த்தகத்தில் தனது இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டது ஃபிளிப்கார்ட். இதன் மூலம் அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாகத் திகழ்ந்தது.
இந்நிலையில் பேஷன் வர்த்தகப் பிரவு தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து முகேஷ் பன்சால் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் முகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஃபிளிப்கார்ட் அமைப்பின் துணை நிறுவனரான சச்சின் பன்சால், பேஷன் வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி செயல்படுவார் என்று தெரிகிறது. முகேஷ் பன்சால் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் மைன்ட்ரா நிறுவனத்தை 30 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.