ஜிஎஸ்டி ஜூலை 1ல் அமல் - வியாபாரிகள் கணக்கு தாக்கல் செய்ய 2 மாதம் கால அவகாசம்!
ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வியாபாரிகள் மற்றும் கம்பெனிகளுக்கு 2 மாதம் அவகாசத்தை ஜிஎஸ்டி கவுன்சில் அளித்துள்ளது.
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து விதமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 1ம் தேதி முதல் கட்டாயம் அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வியாபாரிகள் மற்றும் கம்பெனிகளுக்கு 2 மாதம் அவகாசத்தை ஜிஎஸ்டி கவுன்சில் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 17வது கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில் மாநில நிதியமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டி வரிக்கு வியாபாரிகள் மற்றும் கம்பெனிகள் யாரும் இன்னும் தயாராகவில்லை.
அதனால் ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதை ஒத்திப்போட வேண்டும் என தொழில்துறை நிறுவனங்கள் வலியுறுத்தின. அதனால் வியாபாரிகள் மற்றும் கம்பெனிகள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
செப்டம்பர் வரை அவகாசம்
வியாபாரிகள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என முன்பு கூறப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை செப்டம்பர் 5ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் இணைவதற்கு கம்பெனிகள் தங்கள் விற்பனை கணக்கு விவரத்தை செப்டம்பர் 10ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 20ம் வரை தாக்கல் செய்யலாம்.
கால அவகாசம்
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி நெட் வொர்க்கில் இணைய இன்னும் தயாராகவில்லை எனவும், அதனால் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதை ஒத்திபோடும்படிவர்த்தக நிறுவனங்களும், கம்பெனிகளும் வலியுறுத்தின. இதை ஒத்திபோடுவதற்கான நேரம் நமக்கு இல்லை.
ஜூலை 1 முதல் உறுதி
ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் இணைவதற்கு ஏற்படும் தாமதத்தை ஈடுகட்ட, இரண்டு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என்றார்.
ஜூன் 30ல் இறுதி கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், ஜிஎஸ்டி வரி அமலாவதற்கு முதல் நாளான வரும் 30ம் தேதி நடக்கிறது. அதில் நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி நிர்ணயம்
ஸ்ரீநகரில் கடந்த மாதம் 19ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 1,200 பொருட்கள் மற்றும் 500 சேவைகளுக்கு 5,12,18 மற்றும் 28 என நான்கு விதமாக ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.
தங்கத்திற்கு ஜிஎஸ்டி
கடந்த 3ம் தேதி டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 15வது கூட்டத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு புதிய வரி விகிதமாக 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி நடந்த கூட்டத்தில் சினிமா டிக்கெட், இன்சூலின், ஊறுகாய், அகர் பத்தி உட்பட 66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
லாட்டரி விற்பனைக்கு வரி
மாநில அரசுகள் நடத்தும் லாட்டரிக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.2,500 முதல் ரூ.7500 வரை நாள் வாடகை உள்ள ஏ.சி ஓட்டகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.