மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.61.50 அதிகரிப்பு
டெல்லி: மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை ரூ.61.50 உயர்த்தி பெட்ரோலிய நிறுவனங்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை ரூ.61.50 உயர்த்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள். 14.2 கிலோ சிலிண்டருக்கு இனி கூடுதலாக ரூ.61.50 அளிக்க வேண்டும். டெல்லியில் நேற்று ரூ.545க்கு விற்பனை செய்யப்பட்ட மானியமில்லா கேஸ் சிலிண்டர் இன்று ரூ. 606.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 1ம் தேதி மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.27.50 உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ. 526.2 குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ரூ.44 ஆயிரத்து 846.82க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் தற்போது ரூ.44 ஆயிரத்து 320.32க்கு விற்பனை செய்யப்படுகிறது. விமான எரிபொருளின் விலை அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்று முறை குறைக்கப்பட்டுள்ளது.
மூன்று முறையில் விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.2 ஆயிரத்து 914.98 குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரியை பொறுத்து விமான எரிபொருளின் விலை விமான நிலையத்திற்கு விமான நிலையம் மாறுபடும்.