27% பெட்ரோல் பங்குகள் இனி பிற்படுத்தப்பட்டவர்களுக்கே- மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் துவங்க ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவினருக்கான ஒதுக்கீட்டினை 27 சதவிகிதமாக மத்திய பெட்ரோலிய அமைச்சரகம் அதிகரித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும் என பெட்ரோலிய அமைச்சரகம் அறிவித்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் 40,000 பெட்ரோல் பங்குகள் உள்ளன. மத்திய அரசு மேலும் 35,668 இடங்களில் புதிதாக பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களை துவக்கவும், 7,000 கேஸ் விநியோக உரிமத்திற்கும் விளம்பரம் செய்துள்ளது.
இதில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 22.5% ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 49.5% ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27% ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கும் இந்த மூன்று பிரிவுகளிலும் சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் இந்த ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சிகாலத்தில் தான் முதல் முறையாக ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இந்த விற்பனை மையங்கள் ‘ஏ சைட்' என்று அழைக்கப்படுகின்றன. பெட்ரோல் சில்லறை விற்பனை மையங்களை துவங்க நிலம் வாங்குவதில் தொடங்கி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது வரை ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரை ஒரு முகவருக்கு செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டையடுத்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து வந்தவர்களில் ஒரு பிரிவினர் எதிர் குரல் எழுப்பப் போவது என்னவோ நிச்சயம்...