கத்தார் நாட்டுக்கு 'கா' விட்ட 4 அரபு நாடுகள்... கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு?
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கத்தார் செயல்படுவதைக் காரணம் காட்டி அந்த நாட்டுடனான உறவை முறித்ததால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பயங்கரவாதத்தில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட 4 நாடுகள், கத்தாருடனான நல்லுறுவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளதால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கத்தார், ஐ.எஸ்.ஐ.எஸ், மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனக் கூறி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகள், கத்தார் நாட்டுடன் இருந்த தூதரக உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளன. ராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை துண்டிக்க, அந்நாட்டுடனான தரை, கடல் மற்றும் வான்வழி தொடர்பையும் துண்டிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், அந்நாட்டிலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை இனி பெற இயலாது. இதனால், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒபெக் என்று சொல்லப்படும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி அமைப்பில் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு காரணமாக உடனடியாக கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஒபெக் கூறியுள்ளது. எனினும் பேரல் ஒன்றிற்கு 1 சதவீதம் முதல் 50 டாலர் வரை விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கதாக சொல்லப்படுகிறது.
கத்தாரில் இருந்து எல்என்ஜி எனப்படும் திரவ வடிவிலான இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கத்தார் நாட்டின் மீதான தடையால் எரிவாயு இறக்குமதியில் ஏற்படும் குளறுபடிகளை பொருத்திருந்தே பார்க்க வேண்டிய சூழல் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை மற்றும் தங்கத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.