உற்பத்தி பாதிப்பு... கண்ணீரை வரவழைக்கப்போகும் வெங்காய விலை
சென்னை: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை, கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உயரப்போவதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது சின்னவெங்காயமும், பெரிய வெங்காயமும் 28 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை வரும் அக்டோபர் மாதத்தில் கிலோவுக்கு ரூ.100 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளைச்சல் பாதிப்பு
மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சலில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் உருளைகிழங்கின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
400 மடங்கு உயர்வு
அதே போல் விதைகளின் விலையும் கடந்த வருடத்தை விட 400 மடங்கு உயர்ந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அடிக்கடி விவசாயம் பாதிக்கப்படுவதால் வெங்காயம் பயிரிடப்படும் பரப்பளவும் வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
வெங்காய விலை உயரும்
நடுத்தர மற்றும் ஏழை மக்களை மிரட்டக்கூடிய அளவுக்கு வெங்காயத்தின் விலை உயரக்கூடும் என்பதை முக்கிய வியாபாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.100க்கு விற்ற வெங்காயம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது தலைநகர் டெல்லியிலும் பெரியவெங்காயம் விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ உப்பு ரூ.150
ஒடிஷாவில் உருளைக்கிழங்கின் விலை உச்சத்தை தொட்டது. பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.