சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் ஏ.டி.எம் சேவைக்கு ரூ.20 கட்டணம்: இன்று முதல் அமலுக்கு வருகிறது
சென்னை: சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவதற்கும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இந்த ஏ.டி.எம். கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படாமல் இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்.கார்டை இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.
அதன்படி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மை மாதத்தில் 6வது முறை பயன்படுத்தும் போதிலிருந்து ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி, கணக்கில் இருப்பை அறிவது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது ஆகிய நடவடிக்கைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி நாட்டின் 6 பெரு நகரங்களில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. அதேபோல் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தும் அனுமதியும் 5ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், சென்னை தவிர,தமிழகத்தின் பிற பகுதிகளிலும், பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள சிறிய சேமிப்பு கணக்குகளிலும் தற்போதுள்ள நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விதிமுறை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.