ரெப்போ ரேட்டில் 50 புள்ளிகள் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் ரூபாய் மதிப்பு உயர்வு!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வங்கிகளின் குறுகிய காலக் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதமான ரெப்போ ரேட்டை 50 புள்ளிகள் குறைத்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
அதாவது 7.25 சதவீதமாக இருந்த வட்டிவீதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டு, 6.75 சதவீதமாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் மீட்சி ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2015 ஜனவரி முதல் இதுவரை 1.25 சதவீதம் வரை வட்டி விகதம் குறைக்கப்பட்டுள்ளது. 2011-க்குப் பிறகு ரெப்போ வீதம் மிகக் குறைந்த அளவுக்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.
அதேநேரம் நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 3.66 சதவீதமாகக் குறைந்துவிட்ட நிலையில், இந்த வட்டிக் குறைப்பு பணவீக்கத்தை நிலைப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.
இந்த வட்டிக் குறைப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறுகையில், "நாட்டின் பணவீக்கத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும், வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது," என்றார்.
யெஸ் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான சுப்பா ராவ் கூறுகையில், "ரிசர்வ் வங்கி இந்த முறை மேலும் 25 புள்ளிகள்தான் குறைக்கும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக 50 புள்ளிகள் குறைத்துள்ளது. மத்திய அரசு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மேலும் சீர்த்திருத்தங்களை வேகப்படுத்த வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் மதிப்பு உயர்வு
குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதன் எதிரொலியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 66.12 ஆக உயர்ந்துள்ளது.