புது ஒரு ரூபாய் நோட்டு மீண்டும் வருது... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிட்டு புழக்கத்தில் விடப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி: 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டு பிங்க் பச்சை கலந்த நிறத்தில் இருக்கும். பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சில்லரை தட்டுப்பாடு இன்று மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கடைகள், பஸ்களில் 1 ரூபாய் சில்லரை இல்லாமல் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கடைகள், உணவு விடுதிகளில் 1 ரூபாய்க்கு பதிலாக சாக்லேட் கொடுத்து சமாளிக்கிறார்கள். பேருந்துகளில் பல கண்டக்டர்கள் ஒரு ரூபாய் சில்லறை தருவதேயில்லை.
பணம் மதிப்பு நீக்கம்
கடந்த நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் கடும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது.
புதிய வடிவில் நோட்டுக்கள்
இதையடுத்து, 10, 20, 50, 100 ஆகிய அனைத்து ரூபாய் நோட்டுகளும் சில மாற்றங்களுடன் புதிய வடிவில் புழக்கத்துக்கு விடப்படும் என்று ஆர்.பி.ஐ தெரிவித்தது.
ஒரு ருபாய் நோட்டு
கடந்த 1994ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சிடுவதை மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்தியது. காரணம் அது அச்சிடுவதற்கான செலவு அதிகரித்ததே காரணம். ஒரு ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டன. இன்றைக்கும் பலரது வீடுகளில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்களை காட்சிப் பொருளாக வைத்துள்ளனர்.
மீண்டு வருது 1 ரூபாய்
இதற்கிடையே, 23ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட 1 ரூபாய் நோட்டை, மீண்டும் புழக்கத்தில் விட முயற்சிகள் நடந்து வந்தன. குறிப்பாக, மத்திய அரசு புதிய 1 ரூபாய் நோட்டை அச்சடிக்க உத்தரவிட்டுள்ளதாக, கடந்த வாரம் தகவல் வெளியாகியது.
சக்தி காந்ததாஸ்
1 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. புதிய 1 ரூபாய் நோட்டில், பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் கையெழுத்து இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சாகர் சாம்ராட்
ஒரு ரூபாய் நோட்டு பிங்க் பச்சை வண்ணத்தை கொண்டிருக்கும். பின்பக்கம் எண்ணெய் ஆய்வு தளமான சாகர் சாம்ராட் அடையாள முத்திரை இருக்கும். 15 மாநில மொழிகளும் அதில் இடம்பெற்றிருக்கும்.
சிறப்பம்சங்கள்
செவ்வக வடிவில் காணப்படும் இந்த ஒரு ரூபாய் நோட்டில் 'சத்யமேவ ஜெயதே' என்று மறைவாக அச்சிடப்பட்டிருக்கும். புதிய ஒரு ரூபாய் நோட்டு ₹ என்ற புதிய ரூபாய் குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். பாரத் சர்க்கார் என தேவநாகரி எழுத்திலும், அதற்கு மேல் கவர்மென்ட் ஆப் இந்தியா எனவும் அச்சிடப்பட்டிருக்கும்.
சில்லறை தட்டுப்பாடு
1 என்ற நம்பர் மறைவாக அச்சிடப்பட்டிருக்கும். நோட்டின் வலது பக்கத்தில் பாரத் என்ற எழுத்து மறைவாக இடம் பெற்றிருக்கும். இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டின் வருகைக்குப் பிறகாவது சில்லரை தட்டுப்பாடு பிரச்சினை தீருமா பார்க்கலாம்.