பங்கு சந்தையில் படாதபாடு படுத்திய சன் டிவி பங்குகள்!!
சென்னை: சன் டிவி குழுமத்தின் கல் கேபிள்ஸ் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ததால் அதன் பங்குகள் இன்று பங்கு சந்தையில் ஊசலாட்டத்தை எதிர்கொண்டது.
சன் டிவி நிறுவன பங்குகள் கடந்த சில மாதங்களாக நல்ல ஏறுமுகத்தில்தான் இருந்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் மிகவும் இறங்கு முகமாக ரூ326.55 சன் டிவியின் பங்குகள் மதிப்பு இருந்தன.
பின்னர் மெல்ல மெல்ல ஏறுமாகி மே மாதத்தில் ரூ424.40 என்ற நிலைக்கு சென்றது. அது மேலும் அதிகரித்து ஜூன் மாதத்தில் ரூ459.90; ஜூலையில் ரூ469.20 என்ற உச்சத்தைத் தொட்டது.
ஆனால் தயாநிதி- கலாநிதி மாறன்கள் மீதான ஏர்செல்- மேக்சிஸ் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படக் கூடும் என்று செய்திகள் வெளியானது முதல் மீண்டும் சன் டிவியின் பங்குகள் இறங்கு நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த மாதம் ஆகஸ்ட் 7-ந் தேதியன்று சன் டிவியின் பங்கு ரூ422.0 ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.
இந்நிலையில் சன் டிவி குழுமத்துக்கு மற்றொரு பின்னடைவாக கல் கேபிள்ஸ் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய இன்று சன் டிவி பங்குகள் கடுமையான ஊசலாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்த ஊசலாட்டத்தைத் தொடர்ந்து சன் டிவியின் பங்குகளை வாங்குவதை தவிர்க்குமாறு சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கவும் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.