ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை
மும்பை: தொலைத் தொடர்பு சேவை வழங்கிவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனம் ஏற்கனவே எம்.டி.எஸ். பெயரில் தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் சிஸ்டமா சியாம் டெலிசர்வீசஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸுடன் இணைக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், மொபைல் சேவை வர்த்தகத்தில் ஆர்-காம், ஏர்செல் இணைப்பு பற்றி, ஏர்செல் நிறுவனத்தின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சிந்தியா செக்யூரிட்டீஸ் & இன்வெஸ்ட்மென்ட் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று ஆர்-காம் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆர்-காம் நிறுவனத்துக்கு முக்கியத்துவம் உள்ள வகையில், ஏர்செல், எம்.டி.எஸ். ஆகியவற்றின் இணைப்பு உறுதியானால், ஆர்-காமின் கைவசம், தொலைத் தொடர்புத் தொழிலில் மிக அதிக அளவாக 19.3 சதவீத அலைக்கற்றை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றை அடங்கும். தற்போதைய நிலையில், மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 20 கோடியாக இருக்கும்.
மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்காக சொத்துக்களை விற்று பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஆர்-காம் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான டில்மேன் ஹோல்டிங்க்ஸ் மற்றும் டிபிஜி ஆசியா நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு ரூ.30,000 கோடியாகும்.