"கடலில் கரைத்த பெருங்காயம்"... எவ்வளவு தெரியுமா?.. ஜஸ்ட் ரூ. 1.14 லட்சம் கோடியாம்!!
டெல்லி: இந்தியாவின் 29 அரசு வங்கிகளில் வாராக் கடன் என்று அறிவிக்கப்பட்ட தொகை ரூ. 1.14 லட்சம் கோடி என்று தெரிய வந்துள்ளது.
ரூ. 15,551 என்ற அளவிலிருந்து இது குட்டி போட்டு குட்டி போட்டு பெரும் தொகையாக விஸ்வரூபம் எடுத்து விட்டது. இந்தத் தொகை முழுவதையும் வாங்கி விட்டு ஸ்வாஹாக செய்து கோவிந்தா பாடியுள்ளவர்கள் பெரும் பெரும் தொழிலதிபர்கள் ஆவர்.
தொழிலதிபர்களிடமிருந்து இதை வசூலிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கின்றனவாம் இந்திய வங்கிகள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆர்டிஐ மூலம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து சேகரித்த தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளில் இல்லாத அளவு
இதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வாராக் கடன் நிலுவை அதிகரித்து விட்டது இந்திய வங்கிகளில். கடன் வாங்கியவர்களில் யார் மிகப் பெரிய கடனாளி என்ற விவரத்தை கொடுக்க ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதாம்.
அதைச் சொல்ல முடியாது
இதுகுறித்த ஆர்டிஐ கேள்விக்கு, அந்த விவரம் எங்களிடம் இல்லை. மொத்த கடன் பாக்கி எவ்வளவு என்பதை மட்டுமே நாங்கள் சொல்ல முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாம்.
ரூ. 100 கோடி கடனாளிகள்
அதேபோல ரூ. 100 கோடிக்கு மேல் யாரெல்லாம் கடன் வாங்கியுள்ளனர் அல்லது கடன் பாக்கி வைத்துள்ளனர் என்ற விவரத்தையும் ரிசர்வ் வங்கி கூற மறுத்து விட்டது.
2004 முதல் 2015 வரை
இப்படிப்பட்ட வாராக் கடன் தொகை மட்டும் கடந்த 2004 முதல் 2015 வரை ரூ. 2.11 லட்சம் கோடி என்று தெரிய வந்துள்ளது. இதை வசூலிக்க முடியாமல் கைவிட்டுள்ளன வங்கிகள்.
2 ஆண்டுகளில் மட்டும் பாதித் தொகை
அதிலும் கடந்த 2013 முதல் 2015 மார்ச் வரையிலான கால கட்டத்தில் மட்டும் பாதித் தொகை அதாவது ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 182 கோடி வாராக் கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 வங்கிகள் பரவாயில்லை
ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்டிரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் ஆகிய இரண்டு வங்கிகளில் மட்டும்தான் கடந்த 5 வருடங்களில் வாராக் கடன் பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 85 சதவீத கடன்கள் கோவிந்தா
வாராக் கடனாக அறிவிப்பது என்பது கடந்த 2004 - 2012 இடையே 4 சதவீதமாக இருந்தது. பின்னர் அது 2013-2015ல் 60 சதவீதமாக அதிகரித்து விட்டது. 2013 முதல் மார்ச் 2015 வரையிலான காலகட்ட்தில் இதுபோன்ற கடன் தொகையில் 85 சதவீதம் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டு விட்டது.
4 முறை மட்டுமே
கடந்த 2004 முதல் இந்த ஆண்டு வரை மொத்தமே நான்கு முறைதான் வாராக் கடன் தொகை குறைந்துள்ளது. கடைசியாக அது 2011ல் குறைந்திருந்தது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மோசம்
இருக்கும் வங்கிகளிலேயே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாதான் அதிக அளவிலான வாராக் கடன்களை வைத்துள்ளது. கடந்த 2013ல் இதன் அளவு இந்த வங்கியில் ரூ. 5594 கோடியாக இருந்தது. இது 2015ல் ரூ. 21,313 கோடியாக எகிறி விட்டது.
மொத்த தொகையில் 40 சதவீதம்
2015ம் ஆண்டு மொத்தமாக அறிவிக்கப்பட்ட வாராக் கடன் தொகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அளவு மட்டும் 40 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
நாட்டின் 2வது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த வாராக் கடன் அளவானது 2013 முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2013ல் அஏது 95 சதவீதமாக இருந்தது. 2014-15ல் 238 சதவீதமாக உயர்ந்து விட்டது. 2015ல் வாராக் கடந் அளவானது ரூ. 6587 கோடியாக இருந்தது.
என்னத்த சொல்ல!