கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்த ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகள் ஒப்புதல்
ரியாத்: உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திலேயே நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்த நாடுகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவது இல்லை என அறிவித்திருந்தன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் கடுமையான சரிந்து வந்தது.
இதற்கிடையே, மற்றொரு முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடான, ஈரான் மீதான தடையை, உலக நாடுகள் விலக்கிக் கொண்டுள்ளன. இதனால், எண்ணெய் உற்பத்தி போட்டியில் ஈரானும் குதிக்கவுள்ளது. மேலும், சீனா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்க நிலை காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்து வருகிறது.
இதையடுத்து அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன. ஆனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.