ரூ. 30 லட்சத்திற்கு குறைவான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு - எஸ்பிஐ வங்கி.
ரூபாய் 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது
டெல்லி: ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் "அனைவருக்கும் வீடு" என்ற திட்டமாகும்.
மோடியின் இந்த கனவுத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை மற்றம் தனியார் துறை வங்கிகளும் தம்முடைய வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்து வருகின்றன.
எஸ்பிஐ வங்கி
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது, பிரதமரின் கனவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றது. இதனை கருத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கியானது, தம்முடைய வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 0.50 சதவிகிதம் குறைத்து உத்தரவிட்டது.
வட்டி விகிதம் குறைப்பு
தற்போது இரண்டாவது முறையாக வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ. 30 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 0. 25 சதவிகிதம் , அதாவது 8.60 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதம் குறைத்து 8.35 சதவிகிதம் வட்டி கட்டலாம். ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 0.10 சதவிகிதமும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமல்
ரூ.75 லட்சத்திற்கு அதிகமான வீட்டுக்கடன்களுக்கு 8.6 சதவிகித வட்டி விகிதமே தொடரும் என்றும் இந்த வட்டிக் குறைப்பானது இன்று 09.05.17 முதல் அமலுக்கு வரும் என்று எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
குறைந்த வட்டி விகிதம்
தற்போதைய நிலையில் வீட்டுக்கடன் சந்தையில். எஸ்.பி.ஐ வங்கியின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்.பி.ஐ வங்கியின் வட்டி விகிதமே மிகக் குறைந்த விகிதமாகும். எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அதிரடி வட்டிக் குறைப்பால், வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நிச்சயமாகக் கூடும்.
வீட்டுக்கடன் மானியம்
மேலும், வீட்டுக்கடன் வாங்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பிரதமரின் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் ரூபாய் வரை வட்டியை மானியமாகப் பெறலாம். பிரதமரின் அனைவருக்கம் வீடு என்ற திட்டத்தின் மலிவு விலையில் வீடு கட்டுவதற்காக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும், மலிவு விலை கட்டுமான திட்டங்களுக்கும் ஊக்கம் அளிக்கம் வகையில், எஸ்.பி.ஐ வங்கயானது சிறப்புச் சலுகைகளையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழைகளின் கனவு
இது பற்றி விளக்கம் அளித்த எஸ்.பி.ஐ வங்கியின் தேசிய வங்கிக் குழுவின் (NBG) நிர்வாக இயக்குநர் ரஜனிஷ் குமார், " தற்போது வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப் பட்டுவிட்டதால், வீட்டுக்கடன் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளன. இதனால், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவானது, எஸ்.பி.ஐ வங்கியின வட்டிக் குறைப்பினால் வெகு விரைவில் நிச்சயமாக நிறைவேறும் என்றார்.
சிறப்பு திட்டங்கள்
தனி நபர்களும், மாதச் சம்பளம் வாங்குபவர்களும், தங்களின் வீட்டுக்கடனுக்காக வங்கிகளையும், தனியார் துறை நிறுவனங்களையும் நாடுகின்றனர். அவர்களின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், எஸ்.பி.ஐ வங்கியானது பல்வேறு வீட்டுக்கடன் திட்டங்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.