ரெப்போ வட்டி விகித குறைப்பு எதிரொலி- மும்பை பங்கு சந்தையில் பெரும் சரிவு- 700 புள்ளிகள் வீழ்ச்சி!!
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி ஆகியவை இன்று பெரும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் வீழ்ச்சியை எதிர்கொண்டது.
ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையை இன்று வெளியிட்டது. இதன்படி வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, ரெப்போ விகிதம் 7.50%-ல் இருந்து 7.25% ஆக குறைக்கப்பட்டிருகிறது. கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மார்ச் மாதம் 4-ந் தேதியும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்தது.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை பெரும் சரிவை கண்டுஉள்ளது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது.
காலை வர்த்தம் தொடக்கத்தின்போது 53.54 புள்ளிகள் வரையில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாகி நிலையில் சரிவை எதிர்கொண்டது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 700 புள்ளிகள் வீழ்ச்சியை கண்டது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் இறக்கம் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 200 புள்ளிகள் சரிவைக் கண்டது.
இன்றைய நிஃப்டி சந்தையில் ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்இந்த் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, அம்புஜா சிமெண்ட், யெஸ் பேங்க் ஆகியவை பெரும் இழப்பைச் சந்தித்தன.
அத்துடன் மிக மோசமான பருவ நிலை மாற்றத்தினால் நாட்டின் உணவுப் பொருட்கள் உற்பத்தியானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும் பங்கு சந்தை சரிவுக்கு ஒரு காரணாமக சுட்டிக் காட்டுகின்றனர் சந்தை வல்லுநர்கள்.