தரையில் இறங்கும் விமானங்கள்.. ஸ்பைஸ்ஜெட் கதை முடிகிறது!
டெல்லி: சன் டிவி குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 10 நாட்களுக்குள் போதிய நிதியைத் திரட்டி விமான சேவையை முறையாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால், இனிமேலும் இந்த நிறுவனத்தை தங்களால் மட்டும் நடத்த முடியாது என்றும், மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் கோரிக்கை விடுத்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஸ்பைஸ்ஜெட் கடந்த ஓராண்டு காலமாக முதலீட்டாளர்கள் யாராவது சிக்குவார்களா என்று வலை விரித்து வருகிறது. ஆனால், இதுவரை யாரும் இதில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
1,800 சேவைகள் ரத்து
இதையடுத்து ஏராளமான விமான சேவைகளை இந்த நிறுவனம் ரத்து செய்துவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,800 சேவைகளை ரத்து செய்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் வழங்கிய நிறுவனங்களுக்கு பல நூறு கோடிகள் மிச்சம் வைத்துள்ள இந்த நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. மேலும் விமான நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் நிறுவனம் மிச்சம் வைத்துள்ளது.
விமானங்களை திருப்பி எடுத்துக் கொண்ட நிறுவனங்கள்
மேலும் விமானங்களைக் குத்தகைக்குத் தந்த நிறுவனங்களுக்கும் கட்டணத்தைச் செலுத்தாததால் பல விமானங்களை அந்த நிறுவனங்கள் திருப்பி எடுத்துச் சென்றுவிட்டன. இதனால் ஸ்பைஸ்ஜெட்டிடம் இப்போது சிறிய விமானங்களே உள்ளன. தினமும் 332 சேவைகளை நடத்திய அந்த நிறுவனத்தால் இப்போது 239 சேவைகள் மட்டுமே நடத்த முடிகிறது.
இது தவிர பைலட்டுகள், விமான சிப்பந்திகள், விமான நிலைய ஊழியர்கள் என இந்த நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் ஊதியமும் நிலுவையில் உள்ளது. இதனால் ஏராளமான பைலட்டுகள் பதவி விலகிவிட்டனர். சிப்பந்திகள், ஊழியர்களும் விலகி வருகின்றனர். இதனாலும் தொடர்ந்து விமானங்கள் ரத்தாகி வருகின்றன.
இந் நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூப், சன் குழும தலைமை நிதி அதிகாரி எஸ்.எல்.நாராயணன் ஆகியோர் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை டைரக்டர் ஜெனரல் பிரபாத் குமார் மற்றும் அதிகாரிகளை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்களால் மட்டும் இதை இனிமேலும் நடத்த முடியாது என்றும் தெரிவித்தனர்.
ரூ. 2,000 கோடி தேவை
நிறுவனத்துக்கு ரூ. 2,000 கோடி தேவைப்படுவதாகவும் உடனடியாக ரூ. 1,400 கோடி தேவைப்படுவதாகவும் கூறினர். எண்ணெய் நிறுவனங்கள், விமான நிலையங்கள் ஆகியவை தங்களுக்கு தொடர்ந்து எரிபொருளும், விமான நிலைய சேவைகளையும் வழங்காவிட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் அல்லது ஒரு மாதத்தில் விமான நிறுவனத்தை மூட வேண்டிய நிலைமை வரும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால், இந்த நிதியை அடுத்த 10 நாட்களுக்குள் சன் குழு அதிபர் கலாநிதி மாறனிடம் இருந்து பெற்று விமான நிறுவனத்தை நடத்துமாறு மத்திய அமைச்சர் கூறிவிட்டார். அதே நேரத்தில் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோருடன் இது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய அரசு உதவினால் தான்...
முதலில் ஊழியர்களுக்கான சம்பள பாக்கியைத் தருமான ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகளிடம் விமானத்துறை டைரக்டர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல ஸ்பைஸ்ஜெட் ஓரளவுக்கு நிதியைத் திரட்டினால் அடுத்தகட்டமாக மத்திய அரசும் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கிங்பிஷர் கதை முடிந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் முடங்கினால் உலகளவில் நாட்டுக்கு கெட்ட பெயரும், முதலீட்டாளர்கள் மத்தியில் சுணக்கமும் ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது.