ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது வங்கி கணக்கு, வெளிநாட்டு பயண விவரங்களையும் கட்டாயம் தரவேண்டும்
டெல்லி: வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் வெளிநாட்டு பயண விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி ஏய்ப்பு, கருப்பு பணம் பதுக்கலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் விவரம்:
வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள், ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டின் (மார்ச் 31-ந் தேதி) இறுதியில் கணக்கில் உள்ள தொகை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
ஜாயின்ட் அக்கவுண்ட் இருந்தால் அதன் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டியது அவசியம்.
அதாவது பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் கொடுக்கப்பட்ட இடம், சென்ற நாடுகள், எத்தனை முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்திலேயே ஆதார் எண் குறிப்பிட தனி பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.