தக்காளி கிலோ ரூ. 120... வீட்டில் இனி தக்காளி சட்னியே கிடையாதா?
தக்காளி என்ற வார்த்தையை மட்டுமே எழுதி வைத்து சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இல்லத்தரசிகள், காரணம் விலை உயர்வுதான்.
சென்னை: சாம்பார், ரசம், சட்னி என கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளியை தாரளமாக புழங்கிய இல்லத்தரசிகள் தற்போது தங்கம் போல பயன்படுத்த தொடங்கி விட்டனர். காரணம் கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி கிலோ 120 ரூபா... இதுல தக்காளி சட்னி எங்கே வைக்கிறது என்ற புலம்பல் இப்போது எல்லா வீடுகளிலும் கேட்க ஆரம்பித்து விட்டது. சாம்பாரில் தக்காளியை குறைத்து போடுவதால் சுவையும் குறைந்து விட்டது. தக்காளியில்லாமல் எப்படி சமைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர் இல்லத்தரசிகள்.
பருவமழை பொய்த்துப்போனதால் தாக்காளி விலைச்சல் குறைந்து விட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
ஆனால் வழக்கமான அளவை விட வரத்து குறைவாக உள்ளதால் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 40 லோடு தக்காளி மட்டுமே வருவதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
அழுகும் பொருள்
விரைவில் அழுகும் பொருளான தக்காளியின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும். இப்போது ஒரேடியாக கிலோ 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
விளைச்சல் பாதிப்பு
வறட்சியால் தக்காளி செடிகள் கருகி விடும். திடீர் மழை காலங்களில் விலை கடுமையாக உயர்ந்து விடும். காரணம் தக்காளியை பறிக்க முடியாமல் அழுகி விடுவதுதான். பல மாவட்டங்களில் கிணறு பாசனம் மூலம் தோட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு வறட்சியினால் தக்காளி விலைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிலோ ரூ. 120
கோயம்பேடு மொத்த சந்தையில் நேற்றே சதமடித்தது தக்காளி விலை. சில்லறை கடைகளில் கிலோ ரூ.120க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி அதிகளவில் வந்தால் மட்டுமே விலை குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இன்னும் உயரும்
விளைச்சல் இல்லாததால் தக்காளியின் வரத்தும் குறைந்துகொண்டே இருப்பதால், தக்காளியின் விலை அடுத்தடுத்த நாள்களில் இன்னும் உயரும் என்றே காய்கறி விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். தக்காளியின் விலை உயர்வால், இல்லத்தரசிகளின் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
தக்காளி சட்னிக்கு தடா
சாம்பார், ரசம் உள்ளிட்டவைகளில் சின்ன வெங்காயத்தை குறைத்துக்கொண்டு பெரிய வெங்காயம் போட்டு சமாளித்தனர். இப்போது ரசத்தில் தக்காளிக்க பதிலாக புளியை மட்டுமே போட்டு சமாளிக்கின்றனர். தப்பித்தவறி தக்காளி சட்னியை கேட்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.