மேலும் 7 இந்திய நகரங்களில் உபேர்.. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகம்
மும்பை: இந்தியாவில் மேலும் ஏழு நகரங்களில் தனது சேவையை விரிவு செய்துள்ளது உபேர் கால் டாக்ஸி நிறுவனம்.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வருவது உபேர் கால் டாக்ஸி நிறுவனம். இது சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் ஆகும். செயலிகளை (APPS) அடிப்படையாக கொண்டு இந்த கால் டாக்ஸி நிறுவனம் இயங்குகிறது.
ஏற்கனவே, இந்தியாவின் பல மாநிலங்களில் உபேர் டாக்ஸி புலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அந்நிறுவனம் தனது டாக்ஸி சேவையை மேலும் 7 நகரங்களுக்கு விரிவு படுத்தியுள்ளது.
தற்போது புவனேஸ்வர், கோவை, இந்தூர், மைசூர், நாக்பூர், சூரத் மற்றும் விசாகப்பட்டிணத்திலும் உபேர் கால் டாக்ஸி சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் 18 நகரங்களில் தற்போது உபேர் கால் டாக்ஸி வசதியை மக்கள் பயன்படுத்த இயலும்.
இதன்மூலம், அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக நகரங்களில் உபேர் டாக்ஸிகள் இயங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உபர் கால் டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் பெண் பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து, அந்த கால் டாக்ஸி நிறுவனத்திற்கு டெல்லி அரசு தற்காலிக தடை விதித்ததுடன், அந்நிறுவனம் கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் உபர் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக மற்றொரு பெண் பயணி புகார் அளித்தார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய உபேர் கால் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.