தலையங்கம்: ரூ60 கோடி லஞ்சம்... இந்திய தேர்தல் ஆணையத்தையே விலைபேசிய சசிகலா குரூப்
இந்திய ஜனநாயகத்தையே தலைகுனிய வைத்துள்ளது சசிகலா, தினகரன் கும்பல். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து வளைக்க தினகரன் முயற்சித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
இப்படி ஒரு படுபாதகத்தைப் பார்த்து இந்தியாவே அதிர்ந்து போயுள்ளது... தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தையே விலைக்குப் பேசியிருக்கிறது சசிகலா கும்பல். இப்படி ஒரு இழிவான செயல் மூலம் இந்தியாவின் பெருமைமிகு ஜனநாயகத்தையே தலைகுனியவைத்திருக்கிறது இந்த சசிகலா, தினகரன் கும்பல்.
இந்திய வரலாற்றிலேயே ஊழலின் உச்சகட்ட திலகங்களாக 'திகழ்வது' சசிகலா மற்றும் அவரது குடும்பம்தான். ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை 20 ஆண்டுகளாக இழுத்தடித்தது இந்த கும்பல்தான்.
இப்போதும் தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் 20 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா திடீரென மர்மமான முறையில் மறைந்ததில் சசிகலா கும்பலுக்கு உள்ள தொடர்பு இன்னமும் அம்பலமாகவில்லை.
ஜெயலலிதா கல்லறையில் புதைக்கப்பட்ட ஈரம் காய்வதற்குள்ளாகவே அதிமுகவையும் ஆட்சியையும் கபளீகரம் செய்துவிட சசிகலாவின் கும்பல் களமிறங்கியது. இதற்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் சசிகலா நாள்தோறும் நடத்திய நாடகங்கள் சகிக்க முடியாதவை.
இந்த நாடகத்தின் உச்சகட்டமாக அதிமுக பொதுச்செயலர் நாற்காலியில் அமர்ந்தார் சசிகலா. அதுவும் தம்மை டூப்ளிகேட் ஜெயலலிதா போல கூடுவிட்டு கூடு பாய்ந்து அந்த நாற்காலியில் அமர்ந்தார்.
விட்டதா பேராசை? முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டுபோய் சிறை வைத்தது சசிகலா கும்பல். ஆனால் சசிகலாவின் கனவு தவிடுபொடியாகிப் போனது... உச்சநீதிமன்றம் அவரை 4 ஆண்டு சிறைவாசத்துக்கு அனுப்பி வைத்தது.
அத்துடன் முடிந்ததா.. இல்லை சசிகலா சிறைக்குப் போகும் போது ஃபெரா குற்றவாளி தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலராக்கினார். இவர், 2011-ல் ஜெயலலிதாவுக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக 'ராஜதுரோகம்' செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்.
தினகரன் கையில் அதிமுக சிக்கிய உடனே ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் பதவியை கைப்பற்ற பல நூறு கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு லஞ்சமாக வாரி இறைத்தார்.. மக்களை பணத்தால் விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற மமதையில் திரிந்த தினகரனுக்கு தேர்தலையே ரத்து செய்து ஆப்பு வைத்தது தேர்தல் ஆணையம்.
இப்போது இரட்டை இலை சின்னத்தையும் சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பையும் பெற ரூ60 கோடி அளவுக்கு தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுதத்து வசமாக பிடிபட்டிருக்கிறார் "ஃபெரா" தினகரன். டெல்லியில் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து தினகரன் கொடுத்த லஞ்சப் பணம் சிக்கியுள்ளது.
ஆனால் தமக்கு சுகாஷ் என்பவரே தெரியாது என வழக்கம் போல பல்லவி பாடுகிறார் தினகரன். அதுசரி தாம் இந்திய குடிமகனே இல்லை என்று சொன்னவர் அல்லவா தினகரன்.. அவருக்கு சுகேஷ் சந்திராவையும் தெரியாது என்றுதானே சொல்வார்.