ஓராண்டில் மத்திய பிரதேசத்தில் காணாமல் போன குழந்தைகள் 10,577- என்ன ஆனார்கள்?
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இவர்களில் 90 சதவீதம் குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் 3370 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 4506 குழந்தைகள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, குழந்தைகளை தேடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது மத்தியப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சிஐடி அதிகாரிகள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.