ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து– 10 பேர் பலி; 20 பேர் படுகாயம்
கர்வா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்வா மாவட்டத்தில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் சாசரம் பகுதியில் இருந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கார் என்ற பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா-அம்பிகாபூர் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ் ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.