160 யானை எடை, சுரங்க சோதனை... ஜிஎஸ்எல்வி ராக்கெட் பற்றி முத்தான பத்து தகவல்கள்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அதிக எடைகொண்ட விண்கலங்களை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்தியா இதுவரை விண்ணில் ஏவியதிலேயே மிகப்பெரிய ராக்கெட் இதுவாகும். விண்வெளிக்கு மனிதர்களைச் கொண்டுசெல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, திரும்பிவரக்கூடிய ஆளில்லாத கலம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள ராக்கெட் குறித்த முத்தான பத்து விஷயங்கள் இவைதான்:
அம்மாடியோவ்..
ஜிஎஸ்எல்வி-எம்கே-3 ராக்கெட், 650 டன்கள் எடை கொண்டது. இரு போயிங் விமானங்களுக்கு இந்த எடை சமமானது. அல்லது முழுமையாக மாணவர்களால் நிரப்பப்பட்ட 100 பஸ்களின் எடைக்கும் இதை ஒப்பிடலாம். இன்னும் அதிகமாக சொல்ல வேண்டுமானால் 160 ஆப்பிரிக்க யானைகள் அல்லது 40 லட்சம் கிரிக்கெட் பந்துகளின் எடைக்கும் இதை உதாரணமாக சொல்லலாம்.
தமிழகத்திற்கு முக்கிய பங்கு
ஸ்ரீஹரிகோட்டாவில் வைத்து ராக்கெட் செலுத்தப்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள மகேந்திரகிரி பகுதியில்லாதான் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. மகேந்திரகிரிதான் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரம்ப புள்ளியாகும்.
உறையும் குளிரிலும் அசராது
மார்க் 3 திடம், திரவம், கிரையோஜெனிக் உள்ளடக்கியது. கிரையோஜெனிக் என்பது உறையும் குளிரிலும் செயல்பட வைக்கும் டெக்னாலஜியாகும். மைனஸ் 180 டிகிரி செல்சியசிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சைபீரியாவில்தான் உலகில் மிக குறைவாக மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி ஸ்பார்ட்
ஜிஎஸ்எல்வி என்ற வார்த்தையிலுள்ள ஜி என்பது Geosynchronous என்ற ஆங்கில வார்த்தையை குறிக்கும். அதாவது, செயற்கைக்கோளை இந்த ராக்கெட் புவி சுற்றுக்கு ஒத்திசைவு உள்ள இடத்தில் நிலைநிறுத்தும் என்பது பொருளாகும்.
கீழே விழுந்து நொறுங்காது
இந்த ராக்கெட்டின் வெற்றி ஆளுள்ள கலங்களை ராக்கெட்டுடன் சேர்த்து ஏவும் திட்டத்துக்கு இந்தியாவை தூண்டியுள்ளது. அதில் என்ன பிரச்சினை என்றால் ராக்கெட் திரும்பி புவியீர்ப்பு விசைக்குள் வரும்போது அதன் வேகம் அதிகரித்து கீழே மோதி சிதறும் வாய்ப்புள்ளது. எனவே, இப்போது அனுப்பியுள்ள கலத்திற்கு சோதனை முயற்சியாக தெர்மல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து ஈர்க்கும் சக்திகளை இந்த பாதுகாப்பு சமன் செய்யும்.
இஸ்ரோ அபாரம்
1975ம் ஆண்டில் இருந்து இதுவரை இஸ்ரோ 76 செயற்கைக்கோள்களை பல்வேறு வகையான ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவியுள்ளது. ஆண்டுக்கு இரண்டு என்ற சராசரியை இஸ்ரோ பராமரித்து வருகிறது. வளர்ந்த நாடுகள் விண்வெளி ஆய்வுக்கு ஒதுக்கும் தொகையைவிட மிக குறைந்த தொகையை அரசுகள் ஒதுக்கிவந்த நிலையிலும் இஸ்ரோவின் இந்த சாதனை பாராட்டத்தக்கதே.
பெங்களூருவில் சுரங்க சோதனை
வானில் ராக்கெட் பாயும்போது வளி மண்டலத்தை கிழித்துச் செல்ல வேண்டியிருக்கும். அதை ராக்கெட்டின் உடல் பகுதி தாங்குமா என்பதை சோதிக்க பெங்களூரு இஸ்ரோ ஆய்வகத்தில் பெரிய சுரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட்டை அங்கு நிறுத்தி உள்ளே அதிக அழுத்தத்தில் காற்றை செலுத்தி ராக்கெட் இயங்கத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறதா என்பதை சோதித்து பார்த்துள்ளனர். இதுபோல ஆயிரம் வகை சோதனைகளுக்கு செயற்கைக்கோள் உள்ளாகியுள்ளது.
கேமரா கண்காணிப்பு
ராக்கெட்டின் உட்புறத்தில் ஏகப்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை உள்ளே நடைபெறும் மாற்றங்களை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கின்றன. ஆளுள்ள செயற்கைக்கோள்களை அனுப்பும்போது இந்த கேமராக்கள் பாதுகாப்புக்கு மிகவும் பயன்தரும்.
3 பேர் உட்கார சீட்
ஆளுள்ள செயற்கைக்கோளுக்குள் அதிகபட்சம் 3 பேர் அமர முடியும். இதில் பயணிக்க விரும்புவோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கு 35 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
பயிற்சி பெற்றவர்கள் குறைவு
இந்தியாவை சேர்ந்த நான்கு பேர் மட்டுமே இதுவரை விண்ணில் வசிக்கும் பயிற்சி பெற்றுள்ளனர். அதில் அசோக சக்கரா விருது பெற்ற ராகேஷ் ஷர்மா ஏற்கனவே விண்ணில் பயணித்த அனுபவம் பெற்றவர். தனது 30வது வயதில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். இப்போது அவருக்கு வயது 65. குன்னூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.