10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..நெஞ்சை உலுக்கும் ஓவியம்! - குற்றவாளிக்கு நீதிபதி தண்டனை
டெல்லியில் சிறுமி ஒருவர் தான் பாலியல் கொடுமைக்கு ஆளானது குறித்து வரைந்து காட்டிய ஓவியம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லி : டெல்லியில் சிறுமி ஒருவர் 2 ஆண்டுகளுக்கு மன்னர் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து வரைந்து காட்டிய ஓவியம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த ஓவியத்தை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிக்கு தண்டனையை நீதிபதி உறுதி செய்துள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுமி தனது அம்மா இறப்பிற்குப் பிறகு உறவினர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமிக்கு 8 வயது இருக்கும்பொழுது அவரது உறவினர் ஒருவர் தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது பற்றி வெளியே தெரிய வந்தவுடன் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரைத் தேடி வந்துள்ளனர்.
வன்கொடுமை பற்றி ஓவியம்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிறுமிக்கு நடந்த கொடுமையை நிரூபிப்பது போலீசாருக்கும் பெரும் சவாலாக இருந்தது. இது குறித்து சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது அவருக்குச் சரிவர சொல்லத்தெரியாமல் குழம்பியுள்ளார். இந்நிலையில், அச்சிறுமிடம் நீதிமன்றம் நடந்த சம்பவம் பற்றி படம் வரைந்து காட்டும்படி கேட்டுக்கொண்டது. இதனையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட சிறுமி படமாக வரைந்து காண்பித்தார்.
சம்பவத்தை வரைந்த சிறுமி
நெஞ்சை உறைய வைக்கும் அந்தப் படத்தில் கையில் பலூனுடன் சிறுமி ஆடையில்லாமல் நிற்பது போலவும், கழட்டி வைத்திருந்த ஆடை அருகாமையில் கிடப்பது போலவும் வரைந்துள்ளார். மேலும் தன்னைச் சுற்றியிருந்த வீட்டின் படங்களையும் சிறுமி வரைந்து காட்டினார்.
நீதிமன்றம் தண்டனை அளிப்பு
இந்த ஓவியத்தை வைத்து சம்பவம் நடைபெற்ற இடம் உறவினர் வீடு என்பதையும், அந்த வீட்டுக்குள்தான் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி உறுதிப்படுத்தினார். மேலும், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ரூ.10000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியின் எதிர்காலத்திற்காக ரூ.3 லட்சம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
|
விழிக்குமா சமூகம்
சிறுமியின் குற்றச்சாட்டை ஏற்று நீதிமன்றம் தண்டனை அளிப்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தனக்கு நேர்ந்த கொடுமையை ஒரு பிஞ்சுக் குழந்தை வரைந்து காட்டும் அளவிற்கு ஆழமாக ஊறிப்போன இது போன்ற சம்பவங்களை வன்மம் எண்ணம் படைத்தவர்கள் இனியாவது கைவிடு வேண்டும். கண்களில் கண்ணீரையும் மனதில் ஒருவித அழுத்தத்தையும் ஏற்படுத்தும் இந்த ஓவியம் இந்த சமுதாயம் குழந்தைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.