எனக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது... இன்னமும் நம்பிக்கை குறையாத தினகரன்!
எம்எல்ஏக்கள் தொடர்ந்து என்னிடம் பேசி வருகின்றனர். எனக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று மாலை சந்தித்துப் பேசினார் டிடிவி தினகரன். அரை மணிநேரம் சசிகலாவுடன் பேசிய பின்னர் சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், " அதிமுகவில் உள்ள அணிகள் இணைப்புக்கு அவகாசம் அளித்தும் அணிகள் ஒன்றிணையவில்லை. அதனால் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கட்சியை அவர்களால் ஒன்று சேர்க்க முடியவில்லை.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கடமை உள்ளது, அதனை செய்வேன். கட்சிப் பணிக்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன். அது எப்போது என்பதை பிறகு உங்களிடம் கூறுவேன்.
சசிகலாவிடம் நலம் விசாரித்தேன்
சசிகலா பொதுச்செயலாளர். எனது சித்தி. எனக்கு தாய் ஸ்தானத்தில் இருப்பவர்.நீண்ட நாளாகிவிட்டது அவரைப்பார்த்துப் பேசி. அதனால் இன்று சந்தித்தேன். அவரிடம் நலம் விசாரித்தேன்.
எப்படி வெளியே வரவேண்டும் என்பதை அறிவோம்
அவருக்குப் பழங்கள் வாங்கிச் சென்றேன். அரைமணிநேரம் பேசினோம். அவருக்கு சிறையில் ஒன்றும் சலுகைகள் செய்து தரப்படவில்லை. எங்களுக்கு கோர்ட் வழக்கு என்பதெல்லாம் புதுசு இல்லை. எப்படி அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஜெயக்குமார் பற்றி பேசினால் சலிக்கும்
அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றியெல்லாம் பேசினால் உங்களுக்கும் சலித்துவிடும், எனக்கும் சலித்துவிடும். ஜெயக்குமார் கருத்து தொடர்பாக பேசுவது எனக்கு சரியாக தெரியவில்லை என்றார்.
அதிமுக தலைமை அலுவலகம் செல்வேன்
கட்சிப் பணிக்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன். எப்போது செல்வேன் என உங்களிடம் சொல்வேன். கட்சி செயல்படாமலே உள்ளது. அதனை செயல்படுத்தவே நான் செயல்பட உள்ளேன்.
என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை
துணைப் பொதுச்செயலாளரை அலுவலகத்தில் வராமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கு அதிகாரம் உள்ளது?.
எல்லோருமே நண்பர்கள்
நடவடிகை குறித்து பொறுத்து இருந்து பாருங்கள். எல்லோரும் நண்பர்கள், திருத்திக் கொள்வார்கள் என நினைக்கின்றேன். யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தெரிந்து இருந்தால் அவர்கள் இப்படி பேசியிருக்க மாட்டார்கள்.
122 பேர் ஆதரவு எனக்குண்டு
பயத்தினால் பேசிஉள்ளனர். அவர்கள் மன பிராந்தியில் உள்ளனர். அதிலிருந்து வெளியாகி செயல்படுவார்கள், தலைமையை ஏற்பார்கள். கூடிய விரைவில் பயம் சரியாகும். எனக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. தினசரியும் பலர் போனில் பேசி வருகின்றனர். சிலர் நேரில் வந்து பேசுகின்றனர்.
டீசன்டாக போக நினைக்கிறேன்
எனக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால் அரசின் செயல்பாடு குறித்து கூற இயலாது. யாருடனும் சண்டைபோடும் பழக்கம் எனக்கு இல்லை; எப்போதுமே நான் டீசன்டாக போகணும் என்று நினைப்பவன். நடராசனும், திவாகரனும் எனக்கு உறவினர்கள், அவர்களுடன் சண்டை எல்லாம் போட்டது கிடையாது என்று கூறினார்.