கையில் சிக்காமல் நழுவும் சிறுத்தை: பெங்களூரில் 129 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெங்களூர்: பெங்களூரின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டில் சிறுத்தை பிரச்சனை தீராததால் 129 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதி ஒயிட்பீல்டு. பல்வேறு ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் அங்கு உள்ளன. மேலும் ஏராளமான சாப்ட்வேர் என்ஜினியர்கள், பணக்காரர்கள் அப்பகுதியில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒயிட்பீல்டு அருகே உள்ள வர்த்தூரில் இருக்கும் விப்ஜியார் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.
சிறுத்தை
பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை காலை முதல் மாலை வரை போராடி பிடித்த வனத்துறையினர் அதை பன்னேருகட்டா விலங்கியல் பூங்காவில் விட்டனர். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 3 பேர் காயம் அடைந்தநர்.
மீண்டும்
ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை பிடிக்கப்பட்ட பிறகு விப்ஜியார் பள்ளி திங்கட்கிழமை வழக்கம் போன்று செயல்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விப்ஜியார் பள்ளி அருகே ஒரு சிறுத்தை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
விப்ஜியார்
செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் சிறுத்தை நடமாடுவதை பார்த்ததையடுத்து புதன்கிழமை விப்ஜியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடியும் சிறுத்தை எதுவும் சிக்கவில்லை.
விடுமுறை
சிறுத்தை நடமாடியதை மக்கள் பார்த்தும் அது சிக்காததால் வர்த்தூர், நல்லுரஹள்ளி, தொட்டகனேஹள்ளி, மாரத்தஹள்ளி, கிழக்கு பெங்களூரில் உள்ள 76 தனியார் பள்ளிகள் மற்றும் 53 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது.
தெரியாது
கல்வி அதிகாரி எஸ்.எம். ரமேஷ் கூறுகையில், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தேடியும் சிறுத்தை எதுவும் சிக்கவில்லை. குழந்தைகளை பள்ளியில் வைத்துக் கொண்டு சிறுத்தையை தேடுவதில் கவனம் செலுத்த முடியாது. அதனால் தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்றார்.