குஜராத்தில் பயங்கரம்.. வெள்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி!
அகமதாபாத்: குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வெள்ளத்தில் மூழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. அங்கு இதுவரை 110க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
40,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் 17 பேர் பலி
பனஸ்கந்தா மாவட்டம் கரியா கிராமத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தாக்கூர் என்பவரது குடும்பத்தினர் இப்படி தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
அண்ணன் தம்பிகள்
இறந்தவர்களில் 6 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மற்றவர்கள் அவர்களது மனைவியர், குழந்தைகள் ஆவர். இந்த கோர சம்பவத்தில் அக்குடும்பத்தைச் சேர்ந்த தாசாஜி தாக்கூர் மட்டும்தான் உயிர் பிழைத்துள்ளார். இவர்களது உடல்கள் சேற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டன.
டிராக்டரில் கொண்டு வந்தனர்
17 பேரின் உடல்களையும் மீட்ட கிராமத்தினர் அவற்றை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
பனஸ் ஆற்று வெள்ளத்தில்
தாக்கூரின் குடும்பத்தினர் பனஸ் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஊருக்குள் வெள்ளம் அடித்து வந்ததைத் தொடர்ந்து வீட்டின் மாடியில் தஞ்சமடைந்திருந்தனர். ஆனால் வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக அவர்களது வீடு மூழ்கியது. இதனால் 17 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.